பெரம்பலூர், ஜூன் 5 -பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதிக்கு புறம்பாக மினி பேருந்துகள் தடம் மாறி மாறி இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிராமப்புற பகுதிகளுக்குத்தான் அதிகளவில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து வசதியற்ற கிராமங்கள் பெரிதும் பயனடைந்தன. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மேலப்புலியூர், குரும்பலூர், நெய்க்குப்பை, அனுக்கூர், மருவத்தூர், புதுநடுவலூர், கல்பாடி, சிறுவாச்சூர், அய்யலூர், மலையப்பநகர், காரை, வேப்பந்தட்டையிலிருந்து பிம்பலூர், வாலிகண்டபுரத்திலிருந்து நெற்குணம், மேலமாத்தூரிலிருந்து புதுவேட்டக்குடி, செட்டிக்குளத்திலிருந்து தேனூர் என பல்வேறு வழித்தடங்களில் 77 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த மினி பேருந்துகள் அனைத்தும் கிராமங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் கிராமங்களை சென்றடையும் வழித்தடத்தில் உள்ள மெயின் சாலையில் 4 கிலோ மீட்டர் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது விதிமுறை. ஆனால் இம்மாவட்டத்தில் இயக்கப்படும் பல மினி பேருந்துகள் தாங்கள் பெற்ற வழித்தட உரிமங்களை மீறி பல்வேறு கிராமங்களை விட்டு விட்டு அதிகளவில் மெயின்ரோட்டை பயன்படுத்தி யே கிராமங்களுக்கு சென்றடைகிறது. இதனால் பல்வேறு கிராம மக்கள் காத்திருந்து, பேருந்து வராததால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மினி பேருந்துகள் அனுமதி பெற்ற வழித்தடத்தில் இயக்கவும், கிராமப்புற மக்கள் போக்குவரத்து வசதி பெறவும் வட்டார போக்குவரத்து அலுவலரிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இதில் ஒரு சில மினி பேருந்துகளுக்கு ஆளும் கட்சி தரப்பினர் தலையீடு உள்ளதால் போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என்றனர்.