புதுதில்லி, ஜூலை 29- மருத்துவக் கல்வியை முற்றாக சீரழித்து முழுமுழுக்க வியாபாரமயமாக்கும் விதத்தில் மத்திய பாஜக அரசு, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திங்களன்று மக்களவையில் அறிமுகம் செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றியது. மக்களவையில் திங்களன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை தாக்கல் செய்தார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சில நியமன உறுப்பினர்களால் நிரப்பப்பட்ட ஒரு குழுவை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த மசோதாவை, மருத்துவக் கல்வித்துறையில் கண்காணிப்பு என்பதே இல்லாத மிகப்பெரிய “சீர்திருத்தத்தை” கொண்டுவரப்போகிற மாபெரும் மசோதா என்று ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 என்ற சட்டத்தை ரத்து செய்யும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
மருத்துவக் கல்வியில் நாடு முழுவதும் ஒரேவிதமான தரத்தை கொண்டுவருவதற்காக இந்த மசோதா முன்மொழியப்படுகிறது என குறிப்பிட்ட ஹர்ஷ்வர்தன், எம்பிபிஎஸ் படிப்பில் இறுதியாண்டுத் தேர்வு, மருத்துவ முதுநிலை கல்விக்கான நுழைவுத்தேர்வாக கருதப்படும் என்றும், வெளிநாடுகளிலிருந்து மருத்துவ பட்டம்பெற்ற மாணவர்களுக்கு ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்தத் தேர்வுகள் நெக்ஸ்ட் எனப்படும் தேசிய அளவிலான தேர்வு என அழைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தற்போது இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டப்பூர்வமான கண்காணிப்பு மற்றும் ஒழுங்காற்று வளையத்திற்குள் இருக்கின்றன. இந்த கண்காணிப்பு, புதிய மசோதாவின் படி முற்றாக ரத்து செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மசோதாவுக்கு இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் மணீஷ்திவாரி, குழந்தையைப் பெற்று அதைத் தண்ணீருக்குள் தூக்கியெறிவதைப் போல இந்த மசோதா இருக்கிறது என்றும், மருத்துவக் கல்வியை பீடித்துள்ள நோயைவிட, அதை சரிசெய்வதாகக் கூறி நீங்கள் அறிமுகப்படுத்தும் மருந்து மிகக்கொடியது என்றும் சாடினார். தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலித்துவரும் நன்கொடை எனும் கட்டணக் கொள்ளையை இந்த மசோதா சட்டப்பூர்வமாக்குகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இம்மசோதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.செல்வராசு, திமுக சார்பில் ஆ.ராசா, சமாஜ்வாதி சார்பில் எஸ்.பி.ஹசன், ஆர்எஸ்பி சார்பில் எம்.கே.பிரேமசந்திரன், ஐயுஎம்எல் சார்பில் இ.டி.முகமது பஷீர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் பேசினர். அப்போது மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அளித்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. 260-48 என்ற வாக்குகள் அடிப்படையில் மசோதா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து, இம்மசோதாவை எதிர்த்து நடப்பு வெளிநடப்பு செய்வதாகக் கூறினார். இதையடுத்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.