tamilnadu

img

வல்லுறவு நடக்கவில்லை என்று வாக்குமூலம் தரவேண்டும்... கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையை மிரட்டிய ஆட்சியர்... வீடியோ ஆதாரங்கள் வெளியாகின

புதுதில்லி:
உ.பி. மாநிலத்தில் தலித் இளம்பெண், சாதி ஆதிக்க வெறியர்களால் மிகக் கொடூர மாக பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம்,நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல்கட்சிகள், திரைக்கலைஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசோ, குற்றவாளிகளைப் பாதுகாக்க தீவிரமாக முயன்று வருகிறது. தலித் இளம்பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் தராமல், அவசர அவசரமாக தாங்களாகவே எரித்துச் சாம்பலாக்கியதுடன், இளம்பெண் வல்லுறவே செய்யப்படவில்லை என்றும் வாதிட்டு வருகிறது. அவ்வாறே கூறுமாறு, பெண்ணின் பெற்றோரையும் மிரட்டி வருகிறது.இந்நிலையில், வாக்குமூலத்தை மாற்றித் தரச்சொல்லி, ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரான பிரவீன்குமார் லக்ஸ்காரே நேரடியாகவே, பெண்ணின் தந்தையை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“எனது மகளின் மரணத்தையொட்டி, இங்கு வந்திருக்கும் ஊடகங்கள் இன்னும் ஒருநாளிலோ அல்லது இரண்டு நாளிலோ கிளம்பிச்சென்று விடுவார்கள். அதன் பிறகு, இங்கு நீங்களும் நாங்களும் மட்டும் இருக்கப் போகிறோம்.

எனவே, நான் கூறுவதை கூறிவிட்டேன்..இனி வாக்குமூலத்தை மாற்றிக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம்” என்று அந்த வீடியோவில் ஆட்சியர் பிரவீன்குமார்லக்ஸ்கார் மிரட்டுகிறார். இது உ.பி. பாஜகஅரசின் அராஜகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.இதேபோல அப்பெண்ணின் அண்ணி பேசும் வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. அதில், “உ.பி. அரசுத் தரப்பு எங்கள் மீது அழுத்தத்தைக் கொடுக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால், எங்களது பெண் உயிரிழந்ததாக கூறினால் நிவாரண உதவித் தொகையாவது கிடைக்கும். அதைவிடுத்து வல்லுறவு என்று கூறாதீர்கள் என எனது மாமனாருக்கு மிரட்டல்கள் வருகின்றன” என்று அவர் கண்ணீர் விடுகிறார். இந்த இரு வீடியோக்களும், ஹத்ராஸ் பாலியல் வன்கொலை சம்பவத்தில், உ.பி. பாஜக அரசு அரங்கேற்றும் அயோக்கியத் தனங்களை வெளிச்சம் போட்டுள்ளன.

                                                     ********************

பாஜக எம்.பி.க்களே 3 பேர் பகிரங்க குற்றச்சாட்டு

உ.பி. மாநிலத்தில், ஹத்ராஸ், பல்ராம்பூர் சம்பவங்களில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளை, எதிர்க்கட்சிகள் மட்டுமே கண்டித்து வந்தன.தற்போது இவ்விஷயத்தில் பாஜக எம்.பி.க்களும் மாநில அரசை பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.பாஜக எம்.பி. ராஜ்வீர் தைலர், ஹத்ராஸ் தலித் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட முறையை கேள்வி எழுப்பியுள்ளார். ‘இரவோடு இரவாக தகனம் செய்ய வேண்டாம் என்று காலையில் இறுதிச் சடங்கு செய்யுங்கள்’ என்று, தான் எவ்வளவோ கூறியும் மாவட்ட ஆட்சியர் உடன்படவில்லை என்று தைலர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “இப்பெண்ணுக்கு நடந்த கொடுமைக்காக ஒரு எம்.பி.யாக வெட்கப்படுகிறேன்! அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை எனில் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.இதேபோல மோகன்லால் கஞ்ச் தொகுதி பாஜக எம்.பி.யான கவுஷல் கிஷோர் அளித்துள்ள பேட்டியில், “உ.பி.யில் போலீசார் யார் பேச்சையும் கேட்பதில்லை. அவர்கள் ஏழைகளையும் தலித்துகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார். “ஹத்ராஸ் சம்பவம்உ.பி. அரசு மீதான பிம்பத்தையே உடைத்து விட்டது. இது பாஜக மீதான கறை” என்று கவுஷாம்பியைச் சேர்ந்த பாஜக எம்.பி. விநோத் சொங்காரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.