புதுதில்லி, டிச.23-
உங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கலாம், ஆனால் எங்களுக்கு வீதியில் பெரும்பான்மை இருக்கிறது என்றும், நீங்கள் எங்களை குடிமக்கள் என்று கருதவில்லை என்றால், நாங்கள் உங்களை அரசாங்கமாகக் கருத மாட்டோம் என்றும் ஜவஹர்லால் நேரு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் திங்கள் அன்று கூறினார்.
பீகாரின் புர்னியா பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில், கன்னை குமார், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார். பதிலுக்கு கூடியிருந்த கூட்டம் "ஆசாதி" (விடுதலை) என்று உரத்த கோஷம் எழுப்பியது.
இப்பொதுக்கூட்டத்தில் கன்னையா குமார் மேலும் பேசுகையில், இப்போது நடக்கும் போராட்டம் இந்துக்கள் குறித்தோ அல்லது முஸ்லீம்கள் குறித்தோ அல்ல. எங்களுக்கு வி.டி.சாவர்க்கர் கனவு கண்ட நாடு தேவையில்லை. எங்களுக்கு பகத் சிங் கனவு கண்ட மற்றும் அண்ணல் அம்பேத்கர் கனவு கண்ட நாடுதான் தேவை என்றார்.
(ந.நி.)