tamilnadu

img

இப்டாவின் புரட்சி எழுத்தாளர் யஷ்பால் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 20

இவர் பகத்சிங்கின் தோழர்    கம்யூனிஸ்ட் கட்சியிலும், இப்டாவிலும் முக்கியத் தோழராக, பிரேம் சந்த்தைப் பின்பற்றி சிறந்த படைப்பாளியாக புரட்சி எழுத்தாளர் என்ற பட்டத்தோடு இயங்கியவர் யஷ்பால். இவர் 11 நாவல்களும், 5 சிறுகதைத் தொகுப்புகளும், நாடகங்கள்,2 பயணக்குறிப்புகள், தன்வரலாறு நூல்களை எழுதியவர்.பத்மபூசன், சாகித்ய அகாடமிவிருதுகள் பெற்றவர். பஞ்சாபில்கங்கரா ஹில்ஸில் 3.12.1903-ல்ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். அவரது தாயார் ஆரிய சமாஜத்தில் நம்பிக்கையுள்ளவர். தனது மகனை ஆரிய சமாஜப் பள்ளியில் சேர்த்தார். ஆரிய இந்தியர்கள் தான் நாட்டை ஆள வேண்டும். பிரிட்டிஷார் தங்கள் பிரிட்டனைத்தான் ஆள வேண்டும் என்ற கோட்பாட்டையே அக்காலத்தில் ஆரியசமாஜப்பள்ளிகளில் போதித்தனர்.

ஆனால் யஷ்பால் இளவயதிலேயே காந்தியின்பால் ஈர்க்கப்பட்டார். பின்பு லாகூரில் படிக்கும் போது காந்தியத்தைப் பின்பற்றி பள்ளி, கல்லூரி மாணவப்பருவத்திலேயே கிராமங்களில் சென்று பிரச்சாரம் செய்தார். ஆரிய சமாஜியும் காங்கிரஸ்காரருமான லாலாலஜபதிராயைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டார். நேஷனல் காலேஜில் படித்தபோது பகத்சிங், சுகதேவ் தாப்பரையும் சந்தித்தார். இருவரும் பஞ்சாபில் ஆயுதப் புரட்சி பற்றி யஷ்பாலிடம் பேசினர். மேலும் வரலாற்றுப் பேராசிரியர் ஜெய்சந்திரவித்யாதர் கதார் புரட்சியாளர்களுக்கு மாணவர்களிடம் ஆதரவு திரட்டி வந்தார். 1928-ல் பகத்சிங்கும் அவரது தோழர்களும் இந்துஸ்தான் குடியரசுக் கழகத்தை துவக்கினர். பின்பு அதை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை என்று மாற்றினர். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் அவ நம்பிக்கை ஏற்பட்டதால் யஷ்பால் பகத்சிங்கின் அமைப்பில் சேர்ந்து பணியாற்றத் துவங்கினார்.

இடையில் யஷ்பாலுக்கு ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் கிளார்க் வேலை கிடைத்தது. குடும்ப வறுமையால் வழியின்றி அதில் சேர்ந்தாரே தவிர அவருக்கு பகத்சிங் படைமீதே நினைவாக இருந்தது. 1929-ல் பணியிலிருந்து வெளியேறி லாகூரில் தங்கி படையில் சேர்ந்தார். அங்கு இந்துஸ்தான் படைக்கான வெடிகுண்டு செய்யும் இடத்தில் போலீஸ் புகுந்தது. பகத்சிங்கும் சுகதேவும் கைது செய்யப்பட்டனர். யஷ்பால் உள்ளிட்ட மற்றவர்கள் தலைமறைவானார்கள். தொடர்ந்து சகரனாபூரில் ஒரு வெடிகுண்டு ஆலையும் பிடிபட்டது. இக்காலத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்த இயக்கத்துடன் பல்வேறு அமைப்புகளை சேர்க்க யஷ்பால் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினைத் கொலை செய்ய ரயிலில் குண்டு வைத்ததில்பங்கு பெற்றார். ஆனால் இர்வின் தப்பிவிட்டார். தன்னுடன் படையில் பணியாற்றிய பிரகாஷவதியை யஷ்பால் திருமணம் செய்து கொண்டார்.

போட்டி பொறாமையில் சிலர் யஷ்பாலை போலீஸ் உளவாளி என்று புளுகினர். ஆனால் தலைவர் சந்திரசேகர ஆசாத் சந்தேகங்களைப் போக்கி யஷ்பாலைத் தன்னுடன் வைத்துக் கொண்டார். 1931 பிப்ரவரியில் ஆசாத் கொல்லப்படும் வரை யஷ்பால் அவருடனேயே இருந்தார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆசாத் மறைவுக்குப் பிறகு யஷ்பால் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ஆர்மியை புனரமைப்பதில் இறங்கினார். ரஷ்யாவுக்குப் போய் புரட்சியை எப்படி நடத்துவது என்பதைப் பயின்று வர விரும்பினார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. ஆசாத் மறைவுக்குப் பிறகு இவரே படையின் கமாண்டர் ஆனார். 1932-ல் அலகாபாத்தில் யஷ்பால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷியாம் குமாரி நேரு யஷ்பாலை பாதுகாக்க வந்தார். ஜவகர்லால் நேருவும் தலையிட்டார். ஆறுஆண்டு சிறையிலிருந்தபின் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மூலம் 1938-ல் விடுதலையானார். அதன்பின்அவர் எழுதத் துவங்கினார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் இந்திய சமூக வாழ்வை அவரது படைப்புகள் எடுத்துக் கூறின. இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுப்படையின் தொடர்ச்சியாகவே அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். பின்பு இப்டாவின் அமைப்பாளர்களில் ஒருவரானார். 1939-ல் தனது “குகையிலிருந்து பறந்தது” என்ற நாவலை எழுதினார். கர்மயோகி என்ற இந்திப் பத்திரிகையில் சிறப்புக் கட்டுரைகள் எழுதினார். அதைத் தொடர்ந்து “புரட்சி” என்ற நாவலை எழுதினார். அதை வெளியிட தடைகள் வந்தன. அதனால் “புரட்சி காரியாலயா ”(விப்லவ் காரியாலயா) என்ற பதிப்பகத்தை துவக்கினார்.

தொடர்ந்து “காம்ரேட்”, “துரோகி” என்ற நாவல்கள் கம்யூனிஸ்டுகளை ஆதாரமாய் கொண்டு வெளிவந்தன. அவரது சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் அவரை மாபெரும் போராளியாக, புரட்சியாளராக மக்களிடம் கொண்டு சேர்த்தது. மூன்று தொகுதிகளைக் கொண்ட அவரது வாழ்க்கை வரலாற்றை “ஒரு சிங்கத்தின் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் எழுதினார். அதில் விடுதலைப் போரில் ஆயுதமேந்திய போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பகத்சிங், ஆசாத் இருவரையும் மிகவும் மதித்து நேசித்தார்.

யஷ்பாலின் நூல்களை மதிப்பீடு செய்தவர்கள் அனைவருமே அவரை “மார்க்சிஸ்ட் நாவலிஸ்ட் ” என்றே வர்ணித்துள்ளனர். ஆண்பெண் சமத்துவம் போன்ற விசயங்களில் கம்யூனிசக் கோட்பாடுகளில் உறுதியாக நின்றார். இவரது “ஜாத்தா சச்” என்ற பெரிய நாவல் இந்தியா - பாக் பிரிவினை பற்றியது. அதை டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” நாவலுக்கு இணையானது என்று விமர்சகர்கள் எழுதினர். அவரது கடைசி நாட்களில் கண் பார்வை மங்கி விட்டதால் ஒரு தோழரை அழைத்து போரும் அமைதியும் நாவலை வாசிக்கச் சொல்லி கேட்டார். அதை மகத்தான நாவல் என்று பாராட்டினார்.

இறுதி வரை புரட்சியாளராகவே வாழ்ந்த யஷ்பால் 26.12.1976-ல் காலமானார்.