tamilnadu

img

கம்யூனிஸ்ட்டுகளை வார்க்கும் பட்டறைகள் - சு.பொ.அகத்தியலிங்கம்

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி,  எம்.ஆர். வெங்கட்ராமன், என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியன், ஏ.நல்லசிவன், ஆர்.உமாநாத் போன்ற பலரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் வேலூர், சேலம், கோவை, மதுரை, சென்னை, பெல்லாரி என ஒவ்வொரு சிறையும் காங்கிரஸ் கட்சித் தொண்டராய்ச்  சிறை சென்றோரை கம்யூனிஸ்டாக்கித்  திருப்பி அனுப்பிய கதையைச் சொல்லும்.

கே.முத்தையா, ஆர்.உமாநாத், ப.மாணிக்கம், சுப்பிரமணிய சர்மா, ஆர்.கே.கண்ணன், சி.கோவிந்தராஜன் போன்றோர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டறையில் உருவான கம்யூனிஸ்டுகள். எம்.சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆந்திரா ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். ஆக கல்விச்சாலைகளும் சிறைச்சாலைகளும் கம்யூனிஸ்ட்களை வார்க்கும் பட்டறை ஆயின. 

விடுதலைப் போரின் போது சிறைச்சாலைகளும் கல்விச் சாலைகளும் கம்யூனிஸ்ட்டுகளைத் தயாரிக்கும் பட்டறைகளாயின. தொழிற்சாலைகளும் வேளாண் களமும் போர்க்களங்களாயின. அவை கம்யூனிஸ்டுகளாய் புடம் போடும் உலைக்களமாயின. “திருச்சி சிறையிலிருந்து கம்யூனிஸ்ட் புரட்சிக்காரன் என்ற ஞானஸ்தானம் பெற்று வெளியே வந்த நான் -  சிறையினுள் காந்தியை, காங்கிரஸை, கதரை, கடவுளை எதிர்ப்பவர்கள் என்று வைதீக காங்கிரஸ்காரர்களால் பழிக்கப்பட்டு நின்ற ஒரு சிலரின் முன்னணி வீரரான நான் – சிறையில் வங்கபுரட்சி வீரர்களோடும் பகத்சிங்கின் தோழர்களோடும் பழகியும் விவாதித்தும், மார்க்சிய இலக்கியங்களை ஓரளவுகற்றும் சமதர்ம உறுதியோடும் வெளிவந்திருந்த நான்…”

இப்படி ப.ஜீவானந்தம் கொடுக்கும் வாக்குமூலம்  தனிக்குரல் அல்ல; ஒவ்வொரு சிறையிலும் அதுவே அனுபவம். விடுதலைப் போரில் நானி கோபால் முகர்ஜி என்கிற வங்க இளைஞன். வயது 16. போலீஸ் அதிகாரியை கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்தச் சிறைவாசம் அவரைக் கம்யூனிஸ்டாக்கி வெளியே அனுப்பியது. அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்ட தீவிரவாதிகள் பலர் சாகச நடவடிக்கைகள் நீண்ட காலப் பலன் தராது; உழைப்பாளி மக்களைத் திரட்டும் கம்யூனிசமே தீர்வு என கண்டடைந்தனர். இந்த நெடிய வரலாறே தனியாக எழுதப்பட வேண்டும்.

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியன், ஏ.நல்லசிவன், ஆர்.உமாநாத் போன்ற பலரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் வேலூர், சேலம், கோவை, மதுரை, சென்னை, பெல்லாரி என ஒவ்வொரு சிறையும் காங்கிரஸ் கட்சித் தொண்டராய்ச்  சிறை சென்றோரை கம்யூனிஸ்டாக்கித்  திருப்பி அனுப்பிய கதையைச் சொல்லும்.

கல்கி வார ஏட்டிற்கு 1984ல் பேட்டி அளித்த எம்.கல்யாணசுந்தரம் நினைவுகூர்கிறார்: “மார்க்ஸையோ ஏங்கெல்ஸையோ படித்துவிட்டு கம்யூனிஸ்ட் ஆனவனல்ல  நான். கம்யூனிஸ்ட் தலைவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது .ஆனால் அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.கம்யூனிசத்தைப் பற்றி எந்த புத்தகத்தையும் விற்பனை செய்ய முடியாது. ஏன் வைத்துக் கொண்டிருப்பதே குற்றம். டாக்டர் கிருஷ்ணசாமி, கே.ஏ.சாரி போன்றவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பின்னர்1940 ல் சிறையில் இருந்தபோது சிறுமி இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் [உலக சரித்திரம்], ரஷ்யப்புரட்சி புத்தகங்களைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என்னை கம்யூனிஸ்ட் ஆக்குவதற்கு இவை தூண்டுகோலாக இருந்தன.” எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிர மணியம் போன்றோர் தங்கள் சிறை அனுபங்களைச் சொல்லும் போது ராஜாஜி, பட்டாபி சீத்தாராமய்யா, சத்திய மூர்த்தி போன்றோர் சிறைச் சாலையில் கம்யூனிஸ்டுகள் நடத்தும் வகுப்புகளுக்கு போகக்கூடாது என காங்கிரஸ் தொண்டர்களைத் தடுத்தனர். ஆனால் மீறி வந்து  கம்யூனிஸ்ட்டாக பலர் ஞானஸ்தானம் பெற்றது தொடர்கதை என விவரிப்பர்.

மாணவர்களைத் திரட்ட மாணவர் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1946 ஏப்ரல் மாதம் லக்னோவில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் [ஏஐஎஸ்எப்] உருவானது. இதே ஆண்டுதான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானது. 1936ல் அகில இந்திய மனித உரிமை அமைப்பு உருவாக்கப்பட்டது. கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோர் இதில் செயல்பட்டது கூடுதல் செய்தி. அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவானதும் அதே 1936ல் தான். 1937 டிசம்பர் 31, 1938 ஜனவரி 1 ஆகிய இரு தினங்கள் சென்னையில் மாணவர் சங்க அகில இந்திய மாநாடு நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர் எம்.ஆர்.மசானி. இவர் பின்னாளில் சோஷலிஸ்ட் இயக்கத்தில் தீவிரமானார். அவர் தன் தலைமை உரையில் குறிப்பிட்டார்.

“அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாணவர்களுக்கான அரசியலைக் கொண்டுள்ள மாணவர் அமைப்பாகும். காந்தியவாதிகள், கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள் என்று பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள்.மாணவர்களை அரசியல் ரீதியாகத் தயாரித்தல், சுதந்திரப் போரில் ஈடுபட வைத்தல் என்பது இதன் நோக்கமாகும்.” கே.முத்தையா, ஆர்.உமாநாத், ப.மாணிக்கம், சுப்பிரமணிய சர்மா, ஆர்.கே.கண்ணன், சி.கோவிந்தராஜன் போன்றோர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டறையில் உருவான கம்யூனிஸ்டுகள். எம்.சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆந்திரா ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆக கல்விச்சாலைகளும் சிறைச்சாலைகளும் கம்யூனிஸ்ட்களை வார்க்கும் பட்டறை ஆயின.