“மகான், மாபெரும் பிறவி, பெரிய தலைவர், சாதனையாளர், புரட்சியாளர், சமூக சீர்திருத்தவாதி” என்றெல்லாம் பெரியார் தனககுப் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.‘ எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்க மறுப்பவன்’ என்றே சொல்லிக் கொண்டார். சிறுவயதிலேயே அடுத்தவர்பேச்சைக் கேட்கும் பழக்கம் தனக்கு இருந்ததில்லை என்கிறார். யார் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்பவனாக இருந்ததாகச் சொல்கிறார்.
பத்து வயதிலேயே வியாபாரத்துக்கு வந்துவிட்டேன், பலதரப்பட்ட மக்களை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அதன் மூலம் பல அனுபவங்களும் உண்மைகளும் தெரியவந்ததாகச் சொல்கிறார். தனது வைதீகக் குடும்பத்தில் செய்யப்படும் சடங்குகள் அவருக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தனது தாய், தந்தையர் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் பல கேள்விகளை எழுப்புகிறது. சுதந்திர எண்ணம் உடைய பெரியார், அந்தக் கட்டுப்பாடுகளை நிராகரிக்கிறார். மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை என்று நினைக்கிறார்.
மனிதனை மனிதன் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது, பேசக் கூடாது, நேரில் வரக்கூடாது, கோவிலுக்குள் வரக்கூடாது, ஒரு இடத்தில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது.இதைத் தான் கேள்வி கேட்டார் பெரியார். மனிதர்கள் ஒன்று, நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதே மனிதாபிமானத்தின் உன்னதமான கொள்கை. இந்த வேற்றுமைக்கு சாதி என்று பெயர் சூட்டுகிறார்கள். சாதியைப் பெரியார் கேள்வி கேட்கிறார். இந்த சாதியை மதம் காப்பாற்றுகிறது என்கிறார்கள். மதத்தை கேள்வி கேட்கிறார். இந்த மதத்துக்கு சாஸ்திரங்கள் அடிப்படை என்கிறார்கள். சாஸ்திரங்களைக் கேள்வி கேட்கிறார். இந்த சாஸ்திரங்களை காப்பாற்றுபவர்களாக பிராமணர்கள் இருந்தார்கள். அவர்களை நிராகரிக்கிறார். இவை அனைத்தையும் உருவாக்கியவர் கடவுள் என்றார்கள்.
அப்படி ஒரு கடவுள் இருக்க முடியாது, மனிதனை மனிதன் பிரிப்பவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? என்று கேட்டார். இது தான் பெரியாரியப் பரிமாண வளர்ச்சியின் அடிப்படை. இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்துக்கு மற்றவர்களாக இருந்தால் என்ன பெயர் வைத்திருப்பார்கள்?
கடவுள் மறுப்பு இயக்கம், மத எதிர்ப்பு இயக்கம், சாதி ஒழிப்பு இயக்கம் - இப்படித்தான் பெயர் சூட்டி இருப்பார்கள். பெரியார் என்ன பெயர் வைத்தார் சுயமரியாதை இயக்கம். எந்த மனிதனாக இருந்தாலும் அவனது சுயமரியாதை பாதிக்கப்படக் கூடாது, அவன் சுயமரியாதை உள்ளனவாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இயக்கம் தொடங்கினார்.
‘என் வாழ்வில் எத்தனையோ சொற்களை தேடிப் பார்த்துவிட்டேன். சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையான சொல்லை என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்றவர் பெரியார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், ஆப்பிரிக்கக் குடியுரிமை பெற்றவர், ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது சுயமரியாதை. எல்லாரும் எதிர்பார்ப்பது சுயமரியாதை. எல்லோரும் விரும்புவது சுயமரியாதை. பேதம் இல்லாத வார்த்தை சுயமரியாதை. அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தது தான் மனிதநேயத்தின் உச்சம்.”
(வாஷிங்டனில் நடைபெற்ற மனிதநேயம் - சுயமரியாதை குறித்த பன்னாட்டு மாநாட்டில் பெரியாரிய சிந்தனையாளர் ப.திருமாவேலன் பங்கேற்றுப் பேசியது )
தகவல் உதவி: பி.என்.எஸ்.பாண்டியன்