tamilnadu

img

2011 இல் மோடியை தவறாக வழிநடத்தியவர்கள் யார்? குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயக் கொள்கை விஷயத்தில் விவசாயிகள் கேள்வி

புதுதில்லி:
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும் என்று கூட்டணி கட்சியானஅகாலிதளம் அமைச்சரவையிலிருந்தே விலகியும், மோடி அரசு அதனைக் கண்டுகொண்டதாக இல்லை.போராடும் விவசாயிகளின் கருத்துக் களையும் காதுகொடுத்துக் கேட்கத் தயாரில்லை. மாறாக, அரசு கொண்டுவந் துள்ள 3 வேளாண் சட்டங்களையும் பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் சென்று விவசாயிகளுக்கு விவரமாக விளக்கிச் சொல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார். வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று தொடர்ந்துபேசி வருகிறார்.விவசாயிகள் எதிர்க்கும் 3 மசோதாக்களில் “விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) மசோதா (Farmers ProduceTrade and Commerce -Promotionand Facilitation - Bill) முக்கியமான ஒன்றாகும். 

ஏனெனில், இந்தச் சட்டம் வேளாண் விளைபொருட்களுக்கான அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MinimumSupport Price-MSP) நிர்ணயத்தை ஒழித்துக் கட்டுகிறது என்பதுதான். ஆனால், விவசாயிகள் தாங்கள் விரும்பும் வியாபாரிகளுக்கு நேரடியாக விற்பனை செய்துகொள்வதன் மூலம் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புஏற்படும் என்று அரசு சமாளிக்கிறது.இதுஒருபுறமிருக்க, அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை தற்போது ஒழித்துக் கட்டியிருக்கும் இதே பிரதமர் மோடிதான், 2011-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது, எம்எஸ்பி வேண்டும் என்று அடம்பிடித்தார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டு, விவசாயிகள் மற்றும் விவசாய பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைநிர்ணயம் போன்றவை பற்றி ஆராய, அப்போதைய பிரதமர் டாக்டர்மன்மோகன் சிங், மாநில முதல்வர் கள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்த குழுவுக்கு தலைவராகவே- அன்றைய குஜராத் முதல்வர் மோடியைத்தான் மன்மோகன் சிங் நியமித்துள்ளார். அவரிடம் எம்எஸ்பி குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார்.அதைத்தொடர்ந்து அறிக்கை சமர்ப்பித்த அன்றை குஜராத் முதல்வர் மோடி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (Minimum Support Price - MSP) சட்டப்படியான அங்கீகாரம் தரவேண்டும் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், அதே நரேந்திர மோடிதான் தற்போது பிரதமர் ஆனதும் குறைந்தபட்ச ஆதரவு விலையையே ஒழித்துக் கட்டியுள்ளார். இதைஎதிர்த்து போராடும் விவசாயிகளை,அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் விமர்சித்து வருகிறார்.இதனைத் தற்போது சுட்டிக் காட்டும் விவசாயிகள், இன்று தங்களை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றால், 2011-இல்அன்றைய குஜராத் முதல்வர் மோடியை தவறாக வழிநடத்தியவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.