tamilnadu

img

செய்தி சேனல்களின் வார தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது நிறுத்தம்..... ஆய்வு நடத்தவும் பிஏஆர்சி முடிவு

புதுதில்லி:
சில தொலைக்காட்சி சேனல்கள், டிஆர்பி ரேட்டிங்புள்ளிகளில் மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்தி சேனலுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நேயர்களுக்கான ஒளிபரப்பு ஆய்வுக் குழு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு   வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை காவல்துறையினர்  கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 5 பேரைக்கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.டிஆர்பி மோசடி தொடர்பாக பாஜக ஆதரவு நபரானஅர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி.யில் செய்திப்பிரிவில் உள்ள சில உயர் அதிகாரிகள் புதனன்று காவல்துறை விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில்  பிஏஆர்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ புள்ளிவிவரங்களை மதிப்பிடுதல், தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளஇருக்கிறது. இந்த ஆய்வுகளுக்கு 8 முதல் 12 வாரங்கள்தேவைப்படும்.ஆதலால், அடுத்த 12 வாரங்களுக்கு அனைத்து மொழிகளிலும் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.முன்னதாக, ரிபப்ளிக் சேனல் டிஆர்பி ரேட்டிங் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரி்க்க மறுத்த உச்ச நீதிமன்றம்,மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ரிபப்ளிக் சேனல் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.