tamilnadu

img

மக்களுக்கும் தேசத்துக்கும் எதிரான ரயில்வே தனியார்மயம் முறியடிப்போம்...

இந்திய ரயில்வேயில் சரக்கு வண்டிகள் சராசரியாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன .விரைவு மற்றும் பயணிகள் வண்டிகள் சராசரியாக மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகின்றன. கேட்பவர்களுக்கு எல்லாம் இடவசதி கொடுக்க முடியாத நிலையில் பயணி வண்டிகள் இருக்கின்றன. வண்டிகளின் வேகத்தை குறைந்தபட்சம் 50 கிலோமீட்டராக உயர்த்த வேண்டும். பயணி வண்டிகளின் வேகத்தை குறைந்தபட்சம் 80 கிலோமீட்ட ராக உயர்த்த வேண்டும். கேட்பவருக்கு எல்லாம் இடவசதி கொடுக்கவேண்டும். நாட்டின் மொத்த சரக்குப் போக்குவரத்தில் ரயிலில் செல்வது வெறும் 30 சதம்தான்.மொத்த பயணிகள் போக்குவரத்தில் ரயிலில் செல்வது வெறும் 12 சதம் தான். ரயில்வேயின் பங்கை அதிகரிப்பது தேசத்துக்கு நல்லது.

அரசு முதலீடு செய்ததா?
இதற்காக பல திட்டங்கள் தீட்டப்பட்டன. அதுமட்டுமல்ல தண்டவாளங்கள் ஆண்டுதோறும் 4500 கிலோ மீட்டர் தூரம் பழுதடைகின்றன. 2000 கிலோ மீட்டர் தான் பழுதுபார்க்கப்படுகிறது. 200  ரயில் நிலையங்களில் சிக்னல்கள் ஆண்டுதோறும் பழுதடைகின்றன. ஆனால் 100 தான்புதுப்பிக்கப்படுகின்றன. பாலங்கள் அதேபோல பழுதடைகின்றன. இப்படி ரயில்வே சொத்துக்கள் புதுப்பிக்கப்பட ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவை என்று தலைமை கணக்குஅதிகாரி கூறியுள்ளார். இவற்றுக்கெல்லாம் ஏராளமான பணம் தேவைப்படுகிறது. புதிய பாதைகள் போடவேண்டும் இரட்டைபாதைகள், 4 வழிப்பாதைகள் போட வேண்டும். சரக்கு வண்டிகளுக்கு தனி பாதைகள் போடவேண்டும். பயணிகள் ரயில்களுக்கு தனி பாதைகள் போட வேண்டும். இப்படி ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு 12 ஆண்டில் 50 லட்சம் கோடி ரூபாய் தேவை என்றும் அதை முதலீடு செய்யப் போவதாகவும் நிதி அமைச்சர் 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார். அதாவது ஆறு ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய போகிறோம் என்றுஅறிவித்தார். ஆனால் 2019 ஆகஸ்டில் பிரதமர் மோடிதேசிய அடிப்படை கட்டமைப்புத் திட்டம் (national infrastructure pipeline) என்ற ஒன்றை அறிவித்தார். அதில் ஆறு ஆண்டுகளில்102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாகவும் அதில் 87 சதமானம் மத்திய அரசு முதலீடு செய்யும் என்றும் அறிவித்தார். அதன்படி ரயில்வேக்கு 13 லட்சத்து 69 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்றார்.

இதற்காக 2019 -20 இல் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி மத்திய அரசு முதலீடு செய்யவேண்டும். ஆனால் மத்தியஅரசு முதலீடு செய்ததோ வெறும் 37 ஆயிரம் கோடி ரூபாய்.2021 க்கு 2 லட்சத்து 68 ஆயிரம் கோடி முதலீடு செய்வோம் என்றார்கள். ஆனால் அரசு முதலீடு செய்தது வெறும் 45,000 கோடி ரூபாய் தான். எனவே தண்டவாளங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. ரயில் வண்டிகள் அதே வேகத்தில் ஓடுகின்றன. ரயில் வளர்ச்சிக்கு மோடி அரசு 2014ல் தனியாரை முதலீடு செய்து தண்டவாளம் போட்டுரயில் ஓட்டிக் கொள்ளுங்கள் என்று அழைத்தது. ஆனால்எந்த தனியாரும் தண்டவாளம் போட்டு ரயில் ஓட்டிக்கொள்ள முதலீடு செய்ய முன்வரவில்லை. இதனால் இப்போது 100 வண்டிகள் ஓட வேண்டிய இடத்தில் 130 முதல்150 வண்டிகள் வரை ஓடுகின்றன. 

சரக்கு போக்குவரத்திற்காக மும்பையில் இருந்து தில்லிக்கு லூதியானாவில் இருந்து கல்கத்தாவுக்கு தனிப்பாதை போடுவது 2006 இல் தொடங்கப்பட்டது. அந்த வேலையும் முடியாமல் இருந்தது. தனியார் முதலீடு செய்ய அழைக்கப்பட்டார்கள். ஆனால் ஒருவரும் வரவில்லை.எனவே ரயில்வேயே கடன் வாங்கி அதை போட்டு முடிக்கும் தருவாயில் உள்ளது. ஆனால் இந்தப் பாதைகள் இந்திய ரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் வராது. அவை தனி கார்ப்பரேஷன் ஆக செயல்படும்.

தனியார் ரயில்கள்
இந்த நிலையில் மத்திய அரசு இப்போது இருக்கிற தண்டவாளத்தில் தனியார் வண்டிகளை அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. தனி சரக்கு பாதைகளிலும் தனியாரை சரக்கு வண்டிகள் ஓட்டிக் கொள்ள அனுமதிக்க முடிவு எடுத்துள்ளது. மும்பைக்கும் தில்லிக்கும் இடையே சரக்கு வண்டிகள் தனி சரக்கு பாதைக்கு மாறிவிடும். அதேபோல தில்லி கல்கத்தா வுக்கும் இடையே ஓடிய சரக்கு வண்டிகள் தனி சரக்கு பாதைக்கு மாறிவிடும். இதனால் ஏற்படும் காலி நேரத்தை தண்டவாளத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மற்ற இடங்களில் இருக்கிற பல ரயில்களை ரத்து செய்துவிட்டு அந்த இடத்தில் தனியாரை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. 2025க் குள்500 எக்ஸ்பிரஸ் மெயில் வண்டிகளை தனியாரிடம் தாரைவார்க்க முடிவெடுத்துள்ளது. உடனடியாக 2023 க்குள்150 வண்டிகளை தனியாரிடம் தாரை வார்க்க முடிவெடுத்துஏலம் விட்டுள்ளது. சென்னையில் 13 இணை ரயில்களை தனியாரிடம் தாரை வார்க்க ஏலம் விட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு இரட்டை பாதை போட்டு முடிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து கன்னியாகுமரிக்கு 2025க்குள்இரட்டைப் பாதை போட்டு முடிக்கப்படும். தாம்பரம் மூன்றாவது முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தாம்பரம் மூன்றாவது முனையத்தை தனியார் முனையமாக மாற்றும் விதமாக மத்திய அரசு 5 ரயில் வண்டிகளை தாம்பரத்திலிருந்து இயக்க முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உட்பட பல ரயில் நிலையங்களுக்கு தாம்பரத்தில் இருந்து தனியார் வண்டிகள் 2023க்குள் விட முடிவு செய்துள்ளது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்படும். சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரு தனியார் ரயில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் சென்னையில் 13 ரயில்கள் தனியாருக்கு போகும். 

கட்டண உயர்வு கடுமையாகும்
இந்திய ரயில்வேயில் 13000 பயணிகள் வண்டிகள் ஓடுகின்றன .ஆனால் 2,800 வண்டிகள் தான் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் வண்டிகள் ஆகும் .இவற்றில் உடனடியாக 150 ம் 2025க்குள் 500 வண்டிகளும் தனியாருக்கு போகும். தனியார் வண்டிகளில் அவர்கள் விருப்பம்போல் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 150 வண்டிகளின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் கண்ட நேரப்படி பார்த்தால் இந்த வண்டிகள் 50 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வரை தான் அதாவது இந்திய ரயில்வே எந்த வேகத்தில் வண்டிகளை ஓட்டுகிறதோ அதே வேகத்தில் தான் தனியார் வண்டிகளும் ஓடும். ஆனால் கட்டணங்கள் கண்மண் தெரியாமல் உயர்த்தப்படும். எந்த சலுகைகளும் இருக்காது. முதியோருக்கான சலுகையோ நோயாளிகளுக்கான சலுகையோ விவசாயிகள் பத்திரிகையாளர்கள் வாலிபர்கள் மாணவர்களுக்கான எந்த சலுகையும் இருக்காது. ரயில்வே 55 வகையான சலுகைகளை வழங்குகிறது. அவை எதுவும் தனியார் வண்டிகளில் இருக்காது. அது மட்டுமல்ல அந்த வண்டிகளில் லாபமீட்டும் ஏசி மூன்றடுக்கு ஏசி சேர் கார் ஆகிய பெட்டிகள் மட்டும்தான் இருக்கும்.

ஏனென்றால் இவை மட்டும்தான் லாபமீட்டும் வகுப்புகள் ஆகும். மற்ற வகுப்புகள் அனைத்தும் இந்தியரயில்வேயில் இழப்பை சந்திக்கின்றன. எனவே தனியார்வண்டிகளில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சுகளோ அல்லது முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளோ இருக்காது.நடுத்தர வர்க்கத்திற்கும் ஏழை மக்களுக்கும் ரயில் ஓட்டப்பட மாட்டாது. இந்திய ரயில்வேயின் லட்சியங்களில் அதாவது விரைவான, பாதுகாப்பான, கட்டுபடியான கட்டணத்தில் என்ற லட்சியம் காற்றில் பறக்கும். இந்திய ரயில்வேயும் இந்த லட்சியத்தை நிறைவேற்ற முடியாது. இப்போது இந்திய ரயில்வேயில் பயணிகள் கட்டணம் உதாரணமாக ஒரு பயணத்துக்கு 100 ரூபாய் செலவு ஆனால் ரயில்வே 53 ரூபாய் தான் வசூல் செய்கிறது. 47 ரூபாய்மானியம் தருகிறது. இதனால் ரயில்வேக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இதனை சரக்கு வருமானத்தில் கிடைத்த 46,000 கோடியை கொண்டு  ஈடு கட்டப்பட்டுள்ளது என்று தலைமை கணக்கு அதிகாரி கூறியுள்ளார். வேதனை என்னவென்றால் இப்போது இந்தஅரசின் தேசிய திட்டத்தின்படி 30 சதம் சரக்கு வண்டிகள் 2025க்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அதேபோல இரு தனி சரக்கு பாதைகளில் கூட சரக்கு வண்டிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இதனால் ரயில்வேக்கு சரக்கு வருமானம் குறையும். எனவே பயணிகள் போக்குவரத்துக்குமானியம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவேரயில்வே இப்போதே மோசமான பல நடவடிக்கைகளை மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உதாரணமாக கொரோனா காலத்துக்காக வண்டிகளை ரத்து செய்துவிட்டு இப்போது சிறப்பு வண்டிகளை விடுகிறது.இந்த வண்டிகளில் பொது பெட்டிகள் கிடையாது. அது மட்டுமல்ல முதியோர் சலுகை உட்பட பல சலுகைகள் கிடையாது.சில வண்டிகள் சிறப்பு வண்டிகள் ஆக சிறப்பு கட்டணத்தில் அதாவது 30 சதமானம் கூடுதலான கட்டணத்தில் வண்டிகளை இயக்குகிறது. அத்துடன் 500 சாதாரண பயணி வண்டிகளை விரைவு வண்டிகள் ஆக மாற்றி உள்ளது. இதனால் கிராமப்புறத்து மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் வண்டிகள் நின்று செல்வது ரத்துசெய்யப்படும். கிராமப்புறத்து மக்கள் பக்கத்து நகரத்தில் வேலை பார்க்கவும் படிக்கவும் விவசாயப் பொருள்களை விற்பதற்குமாக  சென்று வருவது பாதிக்கும். சீசன் டிக்கெட் சலுகை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரைஇலவச சீசன் டிக்கெட் உள்ளது. மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச சீசன் டிக்கெட் உள்ளது ஆனால்பயணி வண்டிகள் விரைவு வண்டிகள் ஆக மாற்றப்படுவதால் சீசன் டிக்கெட் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைஏற்படும். ரயில்வேயின் வருமானம் குறைந்தால் ரயில்வேயில் பாதுகாப்புக்காகவும் வளர்ச்சித் திட்டங்களுக்காக முதலீடு செய்ய முடியாது. மத்திய அரசும் முதலீடு செய்யாது. தனியாரும் முதலீடு செய்யமாட்டார்கள். ஆனால் இதே தண்டவாளத்தில் தனியார் அனுமதிக்கப்படுவார்கள் என்றால் விரைவு ரயில்கள் பாதுகாப்பான ரயில்கள் கட்டுப்படியான கட்டணத்தில் ரயில்கள் என்ற லட்சியம் நிறைவேறாது. 

வேலைகளும் உரிமைகளும் பறிபோகும்

அதுமட்டுமல்ல ரயில்வேயில் கண்ணியமான நிரந்தரமான வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும். இப்போது 12 லட்சத்து 26 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். 1990 ல் 16 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்கள் இருந்தார்கள். நாலு லட்சம் பேர் குறைத்துவிட்டார்கள். 12 லட்சத்தில் 2 லட்சம் பேர் எஸ்சி ஊழியர்கள் ஆவார்கள். ஒரு லட்சம் பேர் எஸ்டி ஊழியர்கள் ஆவார்கள். ரயில்வேயில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தனியார்மயம் ஆனால் ஊதியம் குறையும் ‘அத்துடன்’ இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியும் இருக்காது .தனியார் மயம்  ஆவதை முன்னிட்டு இந்திய ரயில்வே 3 லட்சம் காலி இடங்களில் 50 சதவீதம் அதாவது ஒன்றரை லட்சம் காலி இடங்களை சரண் டர் செய்ய முடிவெடுத்துள்ளது. அத்துடன் பாதுகாப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.ஒரு லட்சத்து30 ஆயிரம் காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வுகள்கேள்விக்குறியில் உள்ளன.
தனியார் வேலைவாய்ப்பு உத்தரவாதமற்றதாக, வேலைநேரம் கடுமையானதாக இருக்கும். தனியார்கள் லாபம் வந்தால் தான் ரயில் ஓட்டுவார்கள் லாபம் வரவில்லை என்றால் மூடுவார்கள் லாபம் வரும் தடங்கள் மட்டுமே தனியாருக்கு தரப்படும். இழப்பு ஏற்படும் தடங்கள் இந்திய ரயில்வேக்கு. இதனால் ரயில்வே தொழிலாளிகளுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளமும் பென்ஷனும் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதாவது பிஎஸ்என்எல், ஏர் இந்தியா நிலை ஏற்படும்.

உலக அனுபவம் என்ன?
பிரிட்டனில் 25 தனியார் கம்பெனிகள் ரயில் ஓட்டுகின்றனர். அவை குறைந்த கட்டணத்தில் வண்டி ஓட்ட அரசு மானியம் வழங்குகிறது. அர்ஜென்டினாவில் தனியாரிடம் ரயில் வண்டிகள் ஒப்படைக்கப்பட்டன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் வரவில்லை என்று அனைத்து தண்டவாளங்கள் ரயில் நிலையங்களையும் அவர்கள் மூடிவிட்டார்கள். 47 ஆயிரம் கிலோ மீட்டர் இருந்த தண்டவாளம் வெறும் 8,000 ஆக குறைக்கப்பட்டது. 95,000 ஊழியர்கள் வெறும் 15,000 ஊழியர்களாக குறைந்துபோனது. இந்த நிலைதான் இந்திய ரயில்வேக்கு ஏற்படும். தில்லியில் தில்லி ரயில் நிலையத்திற்கும் ஏர்போர்ட்டுக்கு இடையே மெட்ரோ ரயில் போட ரிலையன்சிடம் ஒப்படைக்கப்பட்டது. ரிலையன்ஸ் போட்டு முடித்தவுடன் ஏர்போர்ட்டுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயித்தது. 44 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்த்தது. ஆனால் கட்டண உயர்வால் மக்கள் மெட்ரோவை புறக்கணித்தார்கள். இழப்பு தாங்காமல் ரிலையன்ஸ் விட்டு விட்டு ஓடிவிட்டது. தில்லி மெட்ரோ ரயில்வே, அதை கையில் எடுத்து சரி செய்து கட்டணத்தை 50 ரூபாயாக நிர்ணயித்து இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த தனியார்மயம் என்பது ரயில் வளர்ச்சியை புறக்கணித்து ரயில் பாதுகாப்பை புறக்கணித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. தனியார்மயம் கட்டண உயர்வோடுநிரந்தர வேலை வாய்ப்பும் சமூக நீதியும் புறக்கணிப்பதில் போய் முடியும் .இந்திய ரயில்வேயும் இழப்பில் போய் முடியும். ரயில் வளர்ச்சி பாதிக்கப்படும். வேலைவாய்ப்பு மக்கள் போக்குவரத்து பாதிக்கப்படும். மானியங்கள் மற்றும் குறைந்த கட்டணம் பறிபோகும். தனியார்மயம் என்பது மக்கள் விரோதம். தேசவிரோதம். ரயில்வே தொழிலாளர்களும் பொதுமக்களும் வாலிபர்களும் மாணவர்களும் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் .

கட்டுரையாளர் :ஆர்.இளங்கோவன், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) துணைத்தலைவர்