tamilnadu

img

உ.பி. மின் ஊழியர் போராட்டம் வெற்றி... மின்வாரியத்தை தனியாருக்கு கொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கியது யோகி அரசு

புதுதில்லி:
உத்தரப்பிரதேசத்தில் மின்ஊழியர்களின் போராட்டத்தால், மின்வாரியத்தை தனியாருக்குதாரை வார்க்கும் முடிவை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்பட்டுவந்த பூர்வாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் என்னும் மின்வாரியத்தை தனியாரிடம் தாரை வார்த்திட அம்மாநில பாஜகஅரசு முடிவெடுத்ததற்கு எதிராக, உத்தரப்பிர தேச மாநிலத்தின் வித்யுத் கர்மசாரி சன்யுக்த் சங்கர்ஷ் சமிதி அக்டோபர் 6  செவ்வாய்க் கிழமை யன்று வேலைநிறுத்தம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்தது. 

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் மாநிலத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், மின் பொறியாளர்கள், சப்டிவிசனல் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இதனால்  வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில அரசு தனியார்மய முடிவை ரத்து செய்தது.மாநில அரசின் தனியார்மய முடிவைக் கைவிடச் செய்த மின் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு, இந்திய மின் ஊழியர்சம்மேளனம் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் மின் விநியோகத்தைத் தனியாரிடம் தாரை வார்த்திடும் முடிவுக்கு எதிராக மாநில மின் ஊழியர் அமைப்புகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு இந்தியமின் ஊழியர் சம்மேளனம் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள் கிறது. மின் ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டமே இந்த வெற்றிக்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது. ‘ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே நமது துயரோட்டும்’ என்பதற்கான உதாரணமாக உழைக்கும் வர்க்கம் திகழ்கிறது. முதல்வர் யோகியின் மந்திர தந்திரமெல்லாம் இங்கே பலிக்கவில்லை. அடுத்து இதேபோன்று நவம்பர் 26 அன்று மோடியின் மந்திர தந்திரமெல்லாம் தவிடுபொடியாக்கப்படும்.உத்தரப்பிரதேசத்தில் போராடிய மின் ஊழியர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதுமிருந்தும் மின் ஊழியர் அமைப்புகள் தங்கள் ஆதரவினைத் தெரிவித்திருந்தன.  ஒட்டுமொத்த உத்தரப்பிரதேச மின் ஊழியர் கூட்டு நடவடிக்கைக்குழுவும், நாட்டில் உள்ள அனைத்து மின் ஊழியர் அமைப்புகளும் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவு அளித்த பின்னணியில் உத்தரப்பிரதேச அரசின் கேபினட் அமைச்சர்கள், போராடும் ஊழியர்களை பேச்சுவார்த்தை க்கு அழைத்தார்கள்.

பேச்சுவார்த்தையின்போது தனியார்மயமுன்மொழிவைக் கைவிட அரசு ஒப்புக் கொண்டது. இதன்மீது ஒப்பந்தம் தயாரானது. அதில் தலைவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எனினும் ஒரு தொலைபேசியில் ஒருவருடன் பேசிவிட்டு அவர் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதன் காரணமாக விவாதம் வீணானது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டம் ஒரு மாநில ஊழியர்களின் பிரச்சனை மட்டுமல்ல. நாட்டை விற்கும் முடிவை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும். உத்தரப்பிரதேச போராட்டம் ஓர் அடையாளப்பூர்வமான ஒன்று. இதேபோல் நாடு முழுவதும் நடைபெறும். மின்சாரம், சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் அத்தியாவசியமான சேவை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் இதனைக் கொண்டு, தனியார் கொள்ளைலாபம் ஈட்டிட, அனுமதிக்க முடியாது.  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                       (ந.நி.)