இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்
ஈரானிடம் இருந்து தடை விலக்கு அளிக்கப்பட்ட காலத்தை கடந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த டிரம்ப், கடந்தாண்டு அதில் இருந்து விலகினார். இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஆனாலும், இந்தியா, சீனா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட 8 நட்பு நாடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும் வகையில், நிபந்தனை அடிப்படையில் கடந்த நவம்பர் முதல் இந்தாண்டு மே வரை 6 மாதம் எண்ணெய் இறக்குமதி செய்ய சலுகை அளித்தது. இச்சலுகை கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது. ஆனால், அமெரிக்காவின் தடையை மீறி, ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணெய் இறக்குமதி செய்ய சீனா, இந்தியா முயற்சிப்பதாக ஊடகங்களில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
வளரும் நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக வர்த்தக முன்னுரிமை அளிக்கும் (ஜஎஸ்பி) திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வந்தது. இதன்படி, வளரும் நாடுகள் அமெரிக்காவுக்கு தங்கள் நாட்டில் இருந்து வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்நிலையில், நீண்டகாலமாக இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் வர்த்தக முன்னுரிமை சலுகையை தற்போது ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 5 ஆம் தேதியோடு ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு அமெரிக்காவின் பொருட்களை எளிதாக, இந்திய சந்தைக்குள் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து எங்களுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை அந்தஸ்தை ரத்து செய்கிறேன் என்று இந்தியாவை வெளிப்படையாக மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களுக்கு ஜூன் 5-ம் தேதிக்கு மேல் வரி விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜிஎஸ்பி மூலம் அதிகம் பயன்பெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. தெற்கு ஆசிய நாடுகளிடம் இருந்து சுமார் 5.6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களை இந்தியா வரியின்றி இறக்குமதி செய்து வந்தது.