tamilnadu

img

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - கே.கே. ராகேஷ் வலியுறுத்தல்

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்திட, மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ் கூறினார்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் கே.கே. ராகேஷ் பேசியதாவது:

நாட்டின் பல பகுதிகளில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு 120 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் கிடங்குகளில் வெங்காயம் அழுகி வீணாகிக் கொண்டுமிருக்கின்றன. அவற்றை மக்களுக்கு அளித்திட அரசாங்கம் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுத்திடவில்லை. உலகில் வெங்காயம் அதிக அளவில் நாம்தான் ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த விலை உயர்வு இது முதல்தடவை அல்ல. அரசாங்கம் உரியமுறையில் தலையிட்டிருந்தால் இதனைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் செய்ய முன்வர மறுக்கிறது. இதன்காரணமாக பதுக்கல்காரர்களும் கறுப்புச்சந்தை பேர்வழிகளும்தான் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே வெங்காய விலை உயர்வு குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டிருக்குமானால் உடனடியாக அது தலையிட வேண்டும்.  வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு கே.கே.ராகேஷ் கூறினார்.