tamilnadu

img

அயோத்தி வழக்கில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் கிடையாது

புதுதில்லி:
அயோத்தி வழக்கில் வாதங்களை முன்வைக்க அக்டோபர் 18 ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாள் கூட கால அவகாசம் தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் உள்ள பாபர் மசூதியை சங் பரிவாரக்கும்பல்கள் இடித்து தகர்த்தன. இந்த இடம்குறித்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 

உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர்  6ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த திங்களன்று முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணைநடைபெறுகிறது. புதனன்று நடைபெற்ற வாதத்தில், 2003 ஆம் ஆண்டு தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கைக்கு இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.இதுபற்றி நீதிபதிகள் கூறுகையில், ‘தொல்லியல் துறையின் அறிக்கை மீது ஆட்சேபம் இருந்தால் அதை நீங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் எழுப்பியிருக்கலாம். அங்கு உங்களுக்கு சட்டத்தின் படி நிவாரணம் கிடைக்கும். இங்கு அதை எழுப்புவதை அனுமதிக்க மாட்டோம்’ என்றனர். இந்நிலையில் அயோத்தி வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை அறிக்கை மீது ஆட்சேபம் தெரிவித்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தொல்லியல் துறை அறிக்கை மீது கேள்வி கேட்கும் உரிமையை இஸ்லாமியஅமைப்புகள் தரப்பு வழக்கறிஞர் இழக்கவில்லை. ஆனால், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் ஆதாரங்களை மதிப்பிட முடியாது.  அயோத்தி வழக்கில் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என மீண்டும் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அதற்கேற்ப இந்து மற்றும் முஸ்லிம் தரப்புகள் தங்களது வாதங்களை முடிப்பதற்கான கால அளவை குறிப்பிட வேண்டும். அக்டோபர் 18 ஆம் தேதிக்கு பிறகு வாதங்களை முன்வைக்க ஒருநாள்கூட அவகாசம் தர முடியாது, இந்த வழக்கில் நான்கு வாரங்களில் தீர்ப்பு வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் வருவதால், இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்வாதங்களை முன்வைப்பதற்கு ஒரு வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்றும்  கூறினர். 

;