புதுதில்லி:
இந்தியாவின் முதல் 10 கார்ப்பரேட் நிறுவனங்களில் அதானி குழுமமும் ஒன்றாகும்.1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதானி குழுமம், 1994-ஆம் ஆண்டுதான், பங்குச்சந்தையில் பங்கு வெளியீடு செய்தது. எனினும் 2002-ஆம் ஆண்டு மோடியின் பார்வைபட்ட பிறகே, அதானி குழுமம் வெளியுலகுக்கு தெரிந்தது.
2002-இல் 765 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அதானி நிறுவனத்தின் மதிப்பு, தற்போது 8.8 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.2002-ஆம் ஆண்டு, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக, பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. இந்த வன் முறையை மோடி அரசு தடுக்கவில்லை என்பதோடு அல்லாமல், இந்துத்துவ சக்திகளுக்கு அப்பட்டமாக துணையும் நின்றது.
இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. ஒரு மாநில முதல்வரை, எதிர்க் கட்சிகள் கண்டிப்பது வழக்கமானதுதான். ஆனால், மோடி சார்ந்த பாஜக-வின் அன்றைய மாபெரும் தலைவரும் - பிரதமருமான வாஜ்பாயே, மோடி ராஜதர்மத்தைமீறி விட்டார் என்று குற்றம் சாட்டினார்.இவ்வாறு கண்டனம் தெரிவித்தவர்களில், இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பும் (Confederation of Indian Industry - CII) ஒன்று. அப்போது, அந்த கூட்டப்புக்குள் ஒற்றைக்குரலாக மோடிக்கு ஆதரவாக ஒலித்து வெளியே வந்தவர்தான் அதானி. அதுமட்டுமல்ல, மோடியை கண்டித்தார்கள் என்பதற்காக, சிஐஐ கூட்டமைப்புக்கு போட்டியாக, குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களைச் சேர்த்துக் கொண்டு ‘குஜராத் மறுமலர்ச்சி குழுமம்’ என்ற புதிய வர்த்தகக் கூட்டமைப்பையே துவக்கி, அதானி, மோடியின் கவனத்தை ஈர்த்தார்.
அதுதான் இன்று, இந்தியாவின் முதல்பத்து பணக்காரர்களில் ஒருவராக அதானியை நிறுத்தியுள்ளது.2005-ஆம் ஆண்டு, குஜராத்தின் கட்ச்வளைகுடாவையொட்டிய முந்த்ரா பகுதியில், அதானி துறைமுகம் கட்டுவதற்காக, சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மோடி தூக்கிக் கொடுத்தார். ஒரு சதுர மீட்டர் நிலத்திற்கு வெறும் 1 ரூபாய் முதல் 32 ரூபாய் என்றமிகமிக மலிவான குத்தகை தொகைக்கு 14 ஆயிரம் ஏக்கரும் வாரிக் கொடுக்கப்பட்டது.இவ்வாறு மலிவாக பெற்ற நிலத்தை, அப்படியே அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 671 ரூபாய் கட்டணத்திற்குஅதானி வாடகைக்கு விட்டார். இதன்மூலமாக மட்டும் அலுங்காமல் குலுங்காமல் பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி சம்பாதித்தார்.
முந்த்ரா பகுதி நிலங்கள் பெரும்பாலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாகும். இந்த மேய்சசல் நிலங்களில்தான் 4620 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகத்தையும் அதானி அமைத்துள்ளார்.2014-ஆம் ஆண்டு, மோடி பிரதமரான பின்னர், ஒடிசாவின் தம்ரா துறைமுகத்தை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் வாங்கியது. அதைத்தொடர்ந்து மோடிவெளிநாடுகள் செல்லும்போது அதானியும் அவருடன் சென்றார். அப்போது, இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் விமானங்கள் செய்யும் ஒப்பந்தத்தை அதானிக்கு மோடி பெற்றுத்தந்தார். ஆஸ்திரேலியாவுக்கு ஜி-20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, அங்கு அதானி நிலக்கரி சுரங்கம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார். அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக அதானி குழுமத்திற்கு, பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’விடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடனும் பெற்றுத் தந்தார்.
துறைமுகங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள்,மின்சார உற்பத்தி எனப் பெருகிய லாபத்தில்,அதானி குழுமம் விமான நிலையங்கள் பராமரிப்பிலும் இறங்கியது. இங்கும் அவருக்குக் கைகொடுத்தது அவரது நண்பர் மோடிதான். அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய 5 விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டன.ஐந்தாண்டு ஆட்சி முடியும் நேரத்தில்,ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின் உற்பத்திக்காகக் கையகப்படுத்தப்பட்ட பழங்குடிகளின் நிலத்தை அதானிக்கு அளித்தது மோடி அரசு. இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு யூனிட் கூட இந்தியாவுக்கு கிடைக்கப் போவது இல்லை என்பதும், அவ்வளவும் வங்காளதேசத்திற்கு விற்கப்பட உள்ளது என்பதும் முக்கியமானது.
தற்போது ஐந்தாண்டு மோடி ஆட்சி முடிந்து வீட்டுக்குப் போகும் நேரத்திலும் தனது நண்பர் அதானிக்கு பலஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற ஒரு கருத்துத் திணிப்பை, அண்மையில் ஊடகங்கள் வெளியிட்டன அல்லவா, அதன் மூலம் மட்டும், அதானி நிறுவனப் பங்கு மதிப்பை17 சதவிகிதம் வரை உயர்த்தி விட்டு, பெரும்லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.