tamilnadu

img

கீழடியில் கிடைத்த பொருட்கள் கி.மு.ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தவை

புதுதில்லி:
கீழடியில் கிடைத்த பொருட்கள் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டுக் கால கட்டத்தைச் சேர்ந்தவை என்று நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.கீழடி அகழாய்வு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.,எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பிரகலாத் படேல் பதிலளித்தார்.மதுரை அருகே, வைகை ஆற்றங்கரைச் சமவெளியில், கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக் காலத்தவை என்பது உண்மையா?  அவ்வாறு இருப்பின், அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வைகோ கோரினார். இதற்கு அமைச்சர் பிரகலாத்சிங் படேல் பதிலளிக்கையில்,  கீழடியில், தமிழ்நாடு தொல்பொருள் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள், கி.மு.ஆறு முதல் மூன்றாம்நூற்றாண்டுக்கால கட்டத்தைச் சேர்ந்தவை என, கரிமப் பகுப்பு ஆய்வுச் சோதனைகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். கீழடி ஆய்வுகளில், இந்தியத் தொல்பொருள் துறையின் பங்கு என்ன? அதற்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு? கீழடியில் கிடைத்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்த, அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? நாடு முழுமையும் உள்ள பிற அருங்காட்சியகங்களில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமா? என்று  வைகோ கேள்வி எழுப்பினார். இந்தியத் தொல் பொருள் துறை, 2014-15, 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளில்  கீழடியில்மூன்று களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டது.  அதற்காக செலவிடப்பட்ட நிதியானது 2014-15 இல் 7 லட்சத்து 70 ஆயிரத்து 010ரூபாய், 2015-16 இல் 48 லட்சத்து 50 ஆயிரத்து 798 ரூபாய், 2016-17 இல் 35 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய், 2017-18 இல் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். கீழடியில், தமிழ்நாடு அரசு ஒரு அருங்காட்சியகம் அமைக்கின்றது என்று அமைச்சர் பதிலளித்தார்.

;