tamilnadu

img

முத்தலாக் மசோதா நிறைவேறியது அதிமுக அம்பலமானது

புதுதில்லி, ஜூலை 30- முத்தலாக் முறையில் விவகாரத்து செய்யும் சிவில் பிரச்சனையை கிரிமினல் குற்றமாக மாற்றி முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கும் “முஸ்லிம்பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, மாநிலங்களவையில் செவ்வாயன்று நிறைவேறியது. இதன்மூலம் இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறுவதற்கு, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் வெளிநடப்பு என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிப்பது போல சென்று, அதன் மூலம் அவையின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்து அதன்மூலம் பாஜக அரசு வெற்றிபெறுவதற்கு உதவி செய்தது அப்பட்டமாக அம்பலமானது.  கடந்தவாரம் மக்களவை இம்மசோதாவை நிறைவேற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் மக்களவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் செவ்வாயன்று இம்மசோதா மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடந்தது. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இம்மசோதாவை மாநிலங்களவையின் தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறி அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளியேறினர்.  இதன்விளைவாக அவையின் பலம் 183 ஆக குறைந்தது. இந்நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகி மசோதா வெற்றிபெற்றது. 

அதிமுக இரட்டை வேடம்

முன்னதாக மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், இம்மசோதாவை ஆதரிப்பதற்கான சட்டப்பூர்வ வாய்ப்பு ஏதும் இல்லை. முஸ்லிம் சட்ட அடிப்படையில் திருமணம் என்பது ஒரு குடிமை ஒப்பந்தம்; அதை மீறுவது - அதாவது விவாகரத்து செய்வது என்பது ஒரு குடிமைப் பிரச்சனையே தவிர, குற்றவியல் பிரச்சனையாக மாற்றப்படக்கூடாது. முத்தலாக் என்பது தடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள அதேவேளையில் அது குற்றம் என்று பிரகடனம் செய்யப்பட முடியாதது என்று கூறியுள்ளது என விவரித்தார். இதன் பின்னர் வெளிநடப்பு செய்வதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளியேறினர். ஆனால் கடந்த வாரம் மக்களவையில் இதே மசோதா மீது வாக்கெடுப்பு நடந்த போது அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார். மக்களவையில் ஆதரவாக வாக்களித்துவிட்டு, மாநிலங்களவையில் எதிர்ப்பு போல பேசி, பாஜகவுக்கு உதவும் விதமாக வெளிநடப்பு என்று நாடகமாடிய அதிமுகவின் இரட்டை வேடமும் மோசடியும் நாடாளுமன்றத்தில் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்தது. 

கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்
இந்நிலையில் செவ்வாயன்று வேலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்ததை ஆதரித்து பிரச்சாரம் செய்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக மேற்கொண்ட இரட்டைவேடம் மோசடி கடுமையாக கண்டிக்கத் தக்கது என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக நடத்தும் சதி  வேலைகளுக்கு அதிமுக அப்பட்டமாக துணைபோகிறது என்றும் சாடினார்.