புதுதில்லி:
42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் திங்களன்று தொடங்கியது. காணொலியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தும் மாநிலங்களில் ஏற்படும் வருவாய் இழப்பை ஐந்தாண்டுகளுக்கு ஈடு செய்வதாக மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2019-20 இல் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.1.65 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியது. இது, 2018-19 நிதியாண்டில் ரூ.69,725 கோடியாகவும், 2017-18 நிதியாண்டில் ரூ.41,146 கோடியாகவும் இருந்தன.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒட்டுமொத்த இழப்பீடாக வழங்க வேண்டிய ரு.1.51 லட்சம் கோடி இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் திட்டத்தை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் அனைத்தும் ஒத்துக்கொள்ளவில்லை. குறிப்பாக, மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. தமிழகத்திற்குரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையை கேட்டுப்பெற வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.