சீத்தாராம் யெச்சூரி சாடல்
மக்களவையில் பாஜக அரசு நிறை வேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதா 2019, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசான இந்தியாவை மதவெறி பிடித்த இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பயணத்தில் மிக முக்கியமான நகர்வு என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்
மத அடிப்படையில் குடிமக்களை பாகுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவை யில் திங்களன்று இரவு நிறைவேற்றப் பட்டது. இந்திய நாட்டில் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தும் விதத்தில் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019ஐ கொண்டு வந்தது. இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக் காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சர வையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திங்களன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசி னார். இதனையடுத்து விவாதம் நடை பெற்றது. திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய விவாதம் இரவு 12 மணி வரை நீடித்தது. விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ்,திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். விவாதத்திற்கு அமித்ஷா பதிலளித்தார். இரவு 12.05 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதர வாக 311 பேரும், எதிராக 80 உறுப்பினர் களும் வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை யில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் புதனன்று தாக்கல் செய்யப்படுகிறது.
சீத்தாராம் யெச்சூரி பேட்டி
இந்நிலையில் இந்த மசோதா, இந்திய தேசத்தை இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றுகிற ஆர்எஸ்ஸ்-பாஜகவின் சூழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப நாடு முழுவதும் மத ரீதியாக மக்களை அணிதிரட்டுவதற்கான பகைமை உணர்ச்சிகளை மேலும் கூர்மை அடையச் செய்யும் நோக்கம் கொண்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். கொச்சியில் செவ்வாயன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சீத்தாராம் யெச்சூரி, இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசுகையில், ஒரு மனிதரின் குடியுரிமை என்பது அவரது மதத்தால் தீர்மானிக்கப்படக்கூடாது என்றார்.
இதற்கு மாறாக, மக்களவையில் பாஜக அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதா 2019, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ் தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்குவதற்கு வழி செய்கிறது; இது குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மிக நேரடியான, கடுமையான தாக்குதலே ஆகும் என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறினார். பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மாண்புகளையும் தனது ஒவ்வொரு செயலின் மூலமாக வும் தகர்த்து வருகிறது எனக் கூறிய சீத்தாராம் யெச்சூரி, “நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மதவெறி பிடித்த - ஆர்எஸ்எஸ் பாணியிலான இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி களை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது; எந்தவிதத்திலும் சகிப்புத்தன்மை இல்லாத, முற்றிலும் மதவாதத்தை முன்னி றுத்துகிற, ஈவிரக்கமற்ற பாசிசத் திட்டமே ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்துராஷ்டி ரம்” என்றும் விவரித்தார்.
இந்தியாவையே விற்கத் துடிக்கும் மோடி அரசு
முன்னதாக கொச்சியில் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனமான பிபிசிஎல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மோடி அரசின் நட வடிக்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய போராட்டக் கருத்தரங்கில் சீத்தாராம் யெச்சூரி உரை யாற்றினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட அவர், இந்திய சமூகத்தின் பன்மைத் தன்மை மீது கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் அதன் அடித்தளத்தின் மீதும் கடும் தாக்குதலை ஏவியுள்ளது என்றார். குறிப்பாக எண்ணெய் துறையில் பெரும் லாபம் குவிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பலவந்தமாக தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலமாக மோடி அரசு, தேசிய மயமாக்கப்பட்ட ஒட்டுமொத்த நிறு வனங்களையும் தனியார்மயமாக்க முயற்சிக்கிறது; இது இந்தியாவையே மிகப்பெரிய அளவிற்கு திட்டமிட்டு விற்பதாகும். இந்திய நாட்டையே விற்கும் மோடி அரசின் திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் படை யாக முன்னணியில் நின்று போராடும் என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.