tamilnadu

img

இராணுவப் பள்ளிகள் 3 முதல் இராணுவப் பள்ளியைத் தொடங்கிய டாக்டர் மூஞ்சேயின் பாசிசத் தொடர்புகள்

தற்போது மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 160 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பள்ளி (Bhonsala Military School) ஆர்.எஸ்.எஸ்சுக்கு வித்திட்ட டாக்டர் பாலகிருஷ்ண சிவராம்ஜி மூஞ்சேயால் (Dr B.S.Moonje) தொடங்கப்பட்டது என்பது அறியத் தக்கது. லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்ட மூஞ்சே 1931 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அய்ரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பயணத்தில் பெரும்பகுதி அப்போது ஐரோப்பாவில் கிளைத்திருந்த பல்வேறு பாசிச நிறுவனக்கள், பள்ளிகள், உடற் பயிற்சிக் கழகங்கள ஆகியவற்றைப் பார்ப்பதில் கழிந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய அக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஐரோப்பாவில் பாசிச நிறுவனங்கள் கிளைத்திருந்தன. அவற்றை வியப்புடன் பார்த்துச் சிலிர்த்த மூஞ்சே தனது பயணத்தின் உச்சகட்டமாக இத்தாலிய சர்வாதிகாரி சிக்னோர் முசோலினியைச் சந்தித்தார் (விவரங்களுக்குப் பார்க்க: எனது "இந்துத்துவத்தின் பன்முகங்கள்", உயிர்மை வெளியீடு, பக் 184 - 188). அங்குள்ள பாசிச அமைப்புகளியும் நிறுவனங்களையும் விதந்து பாராட்டிய மூஞ்சே, "இராணுவத் தன்மையிலான இந்தியப் புத்துயிர்ப்புக்கு இத்தகைய அமைப்புகளின் தேவை அதிகமாக உள்ளது" எனத் தன் கருத்தையும் முன்வைத்து, முசோலினியின் வாழ்த்துக்களோடு திரும்பிய மூங்சே தனது முக்கிய சீடரும் ஆர்.எஸ்,எஸ் அமைக்கப்பாட்டபோது அதன் முதல் தலைவராக இருந்தவருமான ஹெட்கேவருடன் இணைந்து அப்பணிகளைத் தொடங்கினார்,

அப்போது ஒரு மராட்டிய இதழுக்குப் பேட்டி அளித்த மூஞ்சே, "உண்மையில் நமது தலைவர்கள் ஜெர்மானிய இளைஞர் அமைப்பு 'பலில்லா' மற்றும் இத்தாலிய பாசிச அமைப்புகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு அவை மிகவும் பொருத்தமானவை" என்றார். மூஞ்சே, ஹெட்கேவர், லாலு கோகலே மூவரும் இத்திசையில் தீவிரமாகச் செயல்பட்டனர், 1934 ஜனவரி 31 அன்று ஹெட்கேவர் தலைமையில் "பாசிசமும் முசோலினியும்" எனும் தலைப்பில் மாநாடொன்றும் நடத்தப்பட்டது.

பின்னர் மூஞ்சே மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்திற்கான பணியைத் தொடங்கினார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி முதலிய ஐரோப்பிய நாடுகளில் உள்ள இராணுவப் பயிற்சிப் பள்ளிகளின் மாதிரியில் இது அமைக்கப்படும் என வெளிப்படையாகப் பேசி இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத் தக்கது. மூஞ்சே உருவாக்கிய "மத்திய இராணுவக் கழகம் மற்றும் இராணுவப் பள்ளிக்கான திட்ட வரைவு" எனும் ஆவணத்தின் முன்னுரையில் (1935),

"வெற்றியை நோக்கிய பெரும் இலட்சியத்துடன் மக்கள் திரளைக் கொன்று குவிக்கும் விளையாட்டிற்குத் தகுதி உடையவர்களாக நம் சிறுவர்களைத் தயாரிப்பதே நம் பயிற்சியின் நோக்கம். எதிரிக்கு உச்சபட்ச இழப்புகளையும், மரணங்களையும் ஏற்படுத்துவதாகவும், நமது தரப்பில் ஆகக் குறைந்த இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் இந்த வெற்றி அமைய வேண்டும்" எனக் கூறப்பட்டது.

"அமைதி என்பது கோடிக்கணக்கான எஃகு வாட்களின் மீதுதான் கட்டப்பட வேண்டும்" - எனும் முசோலினியின் மேற்கோள் மற்றும் ஜெர்மானியப் பேராசிரியர் ஈவால்டு பான்சே எழுதிய 'இராணுவ விஞ்ஞானம்' எனும் நூலிலிருந்து, "குழந்தப் பருவம் முதல் ஒரு நாட்டின் சிந்தனையில் போர் என்கிற எண்ணம் பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.களத்தில் செத்துக் கொண்டிருக்கும் ஒரு போராளி தனது இரத்தம் தேசக் கடவுளின் பீடத்தில் பாய்கிறது என்று அறிவானேயானால் மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவுவான்' - என்பனபோன்ற பல மேற்கோள்கள் ஆகியவற்றுடன் அமைந்த அவ் அறிக்கை முத்தாய்ப்பாக,

"எனவே இனி குடிமகனுக்கும் படைவீரனுக்கும் இடையிலான வேறுபாடுகள், சிவிலியனுக்கும் சீருடைக்காரனுக்கும் இடையிலான வேறுபாடுகள் இல்லாதொழியும்" எனப் பிரகடனம் செய்தது.

இந்தத் திசையில் இத்தாலியத் தூதரகங்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டு பல வேலைகள் நடந்தன (பார்க்க: முன் குறிப்பிட்ட என் நூல் பக்:186 - 188). முசோலினியின் பாசிச அறிக்கை தாம்லே என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு (1939) தொடர்ச்சியாக அது அவர்களின் 'லோகாண்டி மோர்ச்சா' எனும் இதழில் வெளியிடப்பட்டது.

முன்னதாக பாசிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இங்கு உருவான மற்றொரு அமைப்பான எம்.ஆர்.ஜெயகரின் "ஸ்வஸ்திகா கழகம்" (1929) எனும் அமைப்பும் சிறுவர்களுக்கு இராணுவப் பயிற்சியை வற்புறுத்தியது. இத்தாலியத் தூதரகம் பெரிய அளவில் அவர்களுடன் இந்த அம்சங்களில் ஒத்துழைத்தது. மும்பை ஆவணக் காப்பகத்தில் உள்ள பிரிட்டிஷ் உளவுத்துறைக் குறிப்புகளில் இது குறித்த பல செய்திகள் உள்ளன.

இப்படியான ஒரு பின்னணியில்தான் டாக்டர் மூஞ்சே “மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகம்" எனும் அமைப்பை நாசிக்கை மையமாகக் கொண்டு உருவாக்கினார் (1935). 1937ல் குவாலியர் மகாராஜா ஜிவாஜிராவ் சிந்தியாவின் உதவியுடனும் வாழ்த்துக்களுடனும் 90 மாணவர்களுடன் உருவானதுதான் 'போன்சாலா இராணுவப் பள்ளி' (Bhonsala Military School, Nasik, Maharashtra). அப்போது மூஞ்சேயின் வயது 65.

இந்தப் பள்ளியில்தான் 2008 செப் 16 அன்று மலேகான் குண்டு வெடிப்பிற்குத் திட்டம் தீட்டப்பட்டது எனக் குற்றம்சாட்டியது இதை விசாரித்த பயங்கரவாத எதிர்ப்புப்படை. (ATS).

(தொடரும்)

-Marx Anthonisamy