புதுதில்லி:
மதுராவில் உள்ள ஈத்கா மசூதியை இடிக்கக் கோருவது அற்பமான செயல் என்று அகிலஇந்திய தீர்த்த புரோஹித் மகாசபை கண்டனம் தெரிவித்துள்ளது.மதுராவில் கோயிலும், மசூதியும் இணைந்து இருப்பது மக்களின் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அந்த அமைப்பின் தலைவர் மகேஷ் பதக் கூறியுள்ளார்.
மதுராவில் கிருஷ்ணர் கோயில் (கத்ரா கேசவ் தேவ் கோயில்) 13.37 ஏக்கரில் அமைந் துள்ளது. ஆனால் இந்த வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடத்தில் 1669-1670இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப் உத்தரவின் பேரில் மசூதி ஒன்று கட் டப்பட்டுள்ளது. இதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரா சிவில் நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லியைச் சேர்ந்த 5 பேர் வழக்குதொடர்ந்துள்ளனர். நீதிபதி சாயா சர்மாவும், இந்த வழக்குகளை புதன்கிழமையன்று விசாரிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில்தான், ஈத்கா மசூதியை அகற்றக் கோரும் வழக்கிற்கு அகில இந்திய தீர்த்த புரோஹித் மகாசபா கண்டனம் தெரிவித்துள்ளது. “சில அந்நியர்கள் கோயில் - மசூதி பிரச்சனையை மிக அற் பமாக எழுப்புவதன் மூலம் மதுராவின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அயோத்தியில் என்ன நடந்ததோ, அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும்நடக்க நாங்கள் விரும்பவில்லை. கடந்த 1968களில் இருமதத்தினருக்கும் இடையிலான சமரசத்திற்குப் பிறகு ஸ்ரீகிருஷ்ணா ஜன்மாஸ்தானில் மதுராவில் கோயில் -மசூதி மோதல்கள் இல்லை. இரு சமூகங்களுக்கிடையில் முழுமையான நல்லிணக்கம் இருக்கிறது. இரு ஆலயங்களும் ஒரேஇடத்தில் இருப்பது ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது; தற்போது அரசியல் காரணங்களுக்காக தேவையின்றி சிலர் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்” என்று புரோஹித் மகாசபாவின் தேசியத் தலைவர் மகேஷ் பதக் கூறியுள்ளார்.தீர்த்த புரோஹித் மகாசபை என்பது, கோயில் குருக்களை உறுப்பினர்களாகக் கொண்ட 90 அமைப்புக்களின் கூட்டமைப்பாகும். இதன் தலைமை அலுவலகம் ஹரித்வாரில் அமைந்துள்ளது.