tamilnadu

img

கிரிமினல் நீதிபரிபாலன அமைப்புமுறையே கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம்

தில்லிக் காவல்துறை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியையும் இதர அறிஞர்களையும், செயற்பாட்டாளர்களையும் துணை குற்ற அறிக்கையில் சேர்த்திருப்பதன் மூலம், கிரிமினல் நீதிபரிபாலன அமைப்புமுறையையே கேலிக்கூத்தாக்கி இருக்கிறது என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் மற்றும் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் அவருடைய வாக்குமூலத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டால், அந்த நபரையும் குற்ற அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவராகச் சேர்க்கக்கூடிய அளவிற்கு சட்டம் ஒரு கழுதையாக இருக்க முடியாது. ஒரு நபர் அளிக்கும் தகவலுக்கும் குற்ற அறிக்கைக்கும் இடையே புலன்விசாரணை மற்றும் அதனை ஒத்து வேறேதேனும் ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்து அவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் எல்லாம் தமக்கு உண்டு என்பதை தில்லிக் காவல்துறை மறந்துவிட்டதா?”

“தில்லிக் கலவரங்கள் மீதான வழக்கை தில்லிக் காவல்துறை ஒருதலைப் பட்சமாகக் கையாண்டிருப்பதற்காக, முன்னாள் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான ஜூலியோ ரிபைரோ கண்டித்திருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்று முத்திரைபதித்த காவல்துறையினரின் அறிவுரைகளை தில்லிக் காவல்துறை செவிமடுக்குமா?”

இவ்வாறு ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

(ந.நி.)