tamilnadu

img

தொலைத்தொடர்பு துறையும் 7.06 சதவிகிதம் வீழ்ச்சி... மத்திய அரசே சொல்கிறது

புதுதில்லி:
இந்திய தொலைத் தொடர்புத் துறை வருவாய், 7.06 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசே மாநிலங்களவையில் ஒப்புக்கொண்டுள்ளது.மத்திய அரசு, புதிய தொலைத்தொடர்பு கொள்கையை அமல்படுத்தி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் குறிப்பிட்ட பகுதி தொகையை அரசுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், புதிய தொலைத்தொடர்பு கொள்கை மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு? என மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள தகவலின்படி, தொலைத் தொடர்பு சேவைத் துறையின் 2018 - 2019ம் ஆண்டுக்கான வருவாய் 1 லட்சத்து 44 ஆயிரத்து 681 கோடி ரூபாய். இது 2017-18இல் 1 லட்சத்து 55 ஆயிரத்து 680 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 7.06 சதவிகிதம் வருவாய் குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த 2017 - 2018ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பயனாளர் மூலம் சராசரியாக 124.85 ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. இது 2018-19 நிதியாண்டில் 71.39 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

;