சென்னை:
கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 69-ஆக அதிகரித்து உள்ளது. தெலுங்கானாவில் பெய்த கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
இச்சூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், “தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவதமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய்,போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவிஅளிக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.