tamilnadu

சபரிமலை சீராய்வு மனுக்கள் 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை இல்லை

புதுதில்லி, நவ.14- சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப் பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் செல்வ தற்கு அனுமதி கோரி இளம்பெண் வழக்கறி ஞர்கள் சங்கம் (ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பு)  சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 29.9.2018 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கேரள இந்து வழிபாட்டுத் தலங்கள் நுழைவுச் சட்டம் 1965 பிரிவு 3 பியை ரத்து செய்தது. பெண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் சபரிமலை செல்வதற்கு தடை ஏதும் இல்லை என்கிற நிலை ஏற்பட்டது. தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பெண்கள் வழி பாட்டுக்கு ஆதரவாகவும், நீதிபதி இந்து மல்கோத்ரா அதற்கு மாறாகவும் தீர்ப்பு எழுதினர். அந்த தீர்ப்பின் மீது 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றை 6.2.2019 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வியாழனன்று (நவ.14) வழங்கியது. மற்ற 4 நீதிபதிகளும் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் அளித்த பெரும்பான்மை தீர்ப்பில் சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வு விசாரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும், சபரிமலையில் வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் வழிபட கேரள அரசு கூடுதல் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் எனவும் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். இதுபோல் உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள மதம் சம்மந்தப்பட்ட 7 பிரச்ச னைகள் விரிவான அமர்வின் விசார ணைக்கு விடப்பட்டுள்ளது. மத சுதந்திரத் திற்கான அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் தொடர்பு, பொது ஒழுங்கின் விளக்கம் மற்றும் அறநெறி, மத ரீதியான  நடைமுறைகள் எவை என்பதை நீதிமன்றங் கள் நிர்ணயம் செய்ய முடியுமா, அல்லது மதத் தலைவர்களின் முடிவுக்கு விடுவதா? அரசியல் அமைப்பில் ஒரு மதத்தின் கட்டுப் பாடு உள்ளதா? இவற்றில் தொடர்பில்லாத வர்களின் மனுக்களை கருத்தில் கொள்ள வேண்டுமா? ஆகியவை விரிவான அமர்வின் தீர்வுக்கு விடப்பட்டுள்ளன.   தர்காக்களிலும் மசூதிகளிலும் முஸ்லீம் பெண்கள் நுழைவது குறித்தும், பார்சிகள் அல்லாதோரை திருமணம் செய்யும் பார்சி பெண்களின் வழிபாட்டு உரிமை தொடர்பாக வும், தாவூதி பொஹுரா சமுதாய பெண்களை மத வழக்கங்களின் பகுதியாக ‘சேலாகர்மம்’ செய்வது தொடர்பாகவும் இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீதும் விரிவான அமர்வு முடிவு மேற்கொள்ளும் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.