tamilnadu

img

சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தி வைத்திடுக! கட்டண உயர்வை ரத்து செய்திடுக!

புதுதில்லி,ஏப்.20- சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பி யுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் தமிழ் நாட்டில் உள்ள 26 சுங்கச் சாவடிகளின் வழியாக செல்லும் வாகனங்களுக்கு பயனாளி கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. நாடே கோவிட் 19 பரவலால் மிகப் பெரும் நெருக்கடியில் உள்ள சூழலில் இம் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு ஒரு லாரிக்கு ரூ.1000 ல் இருந்து ரூ.1500 வரை உயர்வு இருக்கும் என தமிழ்நாடு வாகன உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது. இக் கட்டண உயர்வு அத்தியாவசிய பொருள் விலை உயர்வுக்கு வழி வகுக்குமென வியாபாரிகள் சங்கங்களும் கவலை தெரிவித்துள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்புலத்தில் மார்ச் 23 அன்று சுங்க சாவடி கட்டண வசூல் நிறுத்தப்பட்டது என்பதும், அத்தியாவசிய பொரு ட்களை, சேவைகளை கொண்டு செல்கிற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்பதும் நீங்கள் அறிந்ததே. இப்போதும் 10 சதவீதமான சரக்கு வாகனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

ஏற்கெனவே வருமானம், வேலை இழப்புகளால் மக்கள் தாங்கவியலா துயரங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால் தினப் பயன்பாட்டிற்குரிய பொருட்கள் சில கிடைக்காத சூழல் நிலவுகிறது. உதாரணமாக எண்ணெய், காபித் தூள் போன்றவை. அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலைகள் அதிகரித்து ள்ளன. இச் சூழலில் சுங்க சாவடி கட்டண வசூலும், அதன் உயர்வும் நுகர்வோர் - அதாவது சாதாரண மக்கள்- மீது பலத்த அடியாய் இருக்கும்.

மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வழக்கமான கட்டண உயர்வே இது என்று விளக்கம் தரப்படுகிறது. ஓர் அசாதாரண சூழலில் இக் கட்டண உயர்வு ரணத்தின் மீது உப்பை பூசுவது போன்றதாகும். ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை மீது குரூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாகும். சாமானிய மக்களின் வாழ்க்கையை சந்தையின் கருணை க்கு விட்டு விட முடியாது. அவர்க ளுக்கு அரசு தலையீட்டின் மூலம் உதவ வேண்டிய நேரமாகும் இது.

சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை ஊரடங்கு காலம் முழுமையாக முடிகிற வரை  நிறுத்தி வைப்பதற்கும், கட்டண உயர்வை திரும்பப் பெறுவதற்கும் உங்களின் உடனடித் தலையீட்டை வேண்டுகிறேன். உங்களின் விரைவான மறுமொழியை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.