மும்பை, அக்.2- எல்.ஐ.சி.யில் 8000 உதவியாளர் நியமனங்களுக்கான தேர்வு முறைமையில் மாநில மொழி தேர்ச்சியும் இணைக்கப் பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்ட போது அதில் மாநில மொழி தேர்வு இடம்பெறவில்லை. இந்தி தேர்வு, இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் இணைக்கப்பட்டதோடு இந்தியிலேயே தேர்வு எழுதும் வாய்ப்பும் அங்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திலோ மாநில மொழி ஞானம் இல்லாதவர்கள் அது குறித்த எந்தவித தேர்ச்சியுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்து போட்டி போட்டு பணி நியமனமும் பெற இயலுமென்ற நிலை ஏற்பட்டது. அது இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த போட்டி யாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துமென்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில மொழி தேர்வும் இணைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது. பாலிசிதாரர் சேவைக்கு மாநில மொழி பரிமாற்றம் தேவைப்படும் என்றும் சுட்டிக் காட்டியது. எல்.ஐ.சியின் மைய அலுவலகமும் கொள்கை அளவில் இக் கோரிக்கை யை ஏற்றுக் கொண்டு செப்டம்பர் 17 அன்று திருத்தம் ஒன்றை வெளியிட்டது. ஆனாலும் தேர்வு முறை அறிவிக்கப்படாமல் இருந்தது.
தேர்வு அறிவிப்பு
தற்போது அந்தந்த மாநில மொழிகளில் 25 மதிப்பெண்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்றும், எஸ்.சி.எஸ்.டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 9 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்வின் மதிப்பெண்கள் ரேங்கிங்கிற்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றாலும் இதில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நியமனம் பெற இய லாது. 10 ஆம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளில் மாநில மொழி பாடங்கள் எடுத்திருந்தவர்களுக்கு இத் தேர்வு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.