இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை, மருத்துவ ஊழியர்கள் மற்றும் கொரோனா தொற்று வாய்ப்பு இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணியலாம் என்றும், பொதுமக்கள் எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000த்தை நெருக்கி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் கடையில் வாங்கும் முகக்கவசங்களை மட்டுமே அணிய வேண்டும் என்பது அவசியமில்லை, துணியால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் முகக்கவசங்களையும் மக்கள் அணிந்து கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.