புதிய கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, உலகம் முழுவதும் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 8700 பேர் மரணமடைந்துவிட்டார்கள். முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுவதற்கு 3 மாதங்கள் ஆனது. ஆனால், அடுத்த ஒரு லட்சம் பேருக்கோ 12 நாட்களில் தொற்று ஏற்பட்டுவிட்டது. இந்த தருணத்தில் மூன்று விஷயங்கள் பரவலாக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. முதலாவது, மக்கள் சீனம் தன்னுடைய ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரில் கொரோனாவைக் கட்டுப்படுத்திய விதம். இரண்டாவது, சோசலிச கியூபா செய்து வரும் மருத்துவ உதவிகள். மூன்றாவது, இந்தியாவில் கேரள இடதுஜனநாயக அரசு பின்பற்றி வரும் கொரோனா தடுப்புமுறையும், சிகிச்சை முறையும்.
சீனா
சீனாவின் வுஹான் நகரில், புதிய சார்ஸ் வைரஸான கொரோனா (SARS-CoV-2) பரவி வருவது, ஜனவரி 7 ஆம் தேதிதான் உறுதியானது. அடுத்த ஒரு வாரத்தில் சீனாவில் முதல் மரணம் நிகழ்ந்தது. அதே காலகட்டத்தில் தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்தில், வுஹானில் இருந்து சென்றவர்களுக்குத் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ஜனவரி 23 அன்று சீன அரசு வுஹான் நகரையே கிட்டத்தட்ட ஊரடங்கு நிலையில் வைத்திருக்கும் ‘லாக் டவுன்’ நடவடிக்கையை அமல்படுத்தியது. ‘இப்படி ஒரு வழிமுறையை நாங்கள் சொல்லி, சீனா செயல்படுத்தவில்லை. உலகின் நோய்த்தொற்று வரலாற்றிலேயே இப்படிச் செய்வது இதுதான் முதல் முறை’ என உலக சுகாதார நிறுவனம் சீனாவைப் பாராட்டியது. இரண்டே மாதங்களில் பாதிப்பு பரவுவதைக் கட்டுப்படுத்தி, கடைசி நோயாளியையும் குணப்படுத்தி, வுஹான் நகரம் மீண்டும் இயல்புவாழ்க்கை தற்போது திரும்பியது.
கியூபா
கொரோனா தொற்று இருந்த 5 பயணிகளை ஏற்றிவந்த பிரிட்டிஷ் கப்பல், கரீபியன் பகுதியில் கரையேறுவதற்கு எந்த நாடும் அனுமதிக்காத போது, கியூபா அனுமதித்தது. தொற்று இருந்தவர்கள் விரும்பினால் கியூபாவிலேயே சிகிச்சை பெறலாம் என அறிவித்தது. கியூபாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, மருத்துவ உதவியையும், பாதுகாப்பையும் பெறும் உரிமை ஒவ்வொரு கியூப குடிமகனுக்கும், குடிமகளுக்கும் உண்டு. இந்த அடிப்படை உரிமையை உறுதி செய்ய கியூபா, தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.1 சதவிகிதத்தை மருத்துவத்துக்காக செலவு செய்கிறது. அனைத்து மருத்துவ மையங்களையும் அரசே நடத்துகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். 2015ல் கியூபாவில் 127 பேருக்கு ஒரு டாக்டர் என்ற எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருந்தார்கள். (இந்தியாவில் 1600 பேருக்கு ஒரு மருத்துவர். மருத்துவத்துக்கான ஒதுக்கீடு ஜிடிபியில் 1% மட்டுமே. 60 சதவிகித மருத்துவச் செலவை இந்தியர்கள் தங்களுடைய கைக்காசில் இருந்து செலவழிக்கிறார்கள்.)
1960ல் சிலி பூகம்பம் தொடங்கி, கிட்டத்தட்ட 94 நாடுகளுக்கு இதுவரை கியூபா மருத்துவர்களை அனுப்பி உதவி வருகிறது. ஓர் ஆய்வுப்படி, 1960ல் இருந்து 2000 வரை ஆண்டுக்கு 3350 கியூப மருத்துவ சேவையாளர்கள் வெளிநாடுகளில் சேவை புரிந்துள்ளார்கள். 2014-2016ல் ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா, சியரா லியோன் நாடுகளில் எபோலா வைரஸ் பரவிய போது, இரத்தப் போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவக் குழுவில் பணியாற்ற தங்களுடைய மருத்துவர்களை அனுப்ப உலக நாடுகள் தயக்கம் காட்டின. கியூபாவின் ஹென்ரி ரீவ்ஸ் பிரிகேட் மருத்துவ அமைப்பின் 250 பணியாளர்கள் துணிச்சலாக சென்றார்கள். 80 சதவிகித மரணம் என்பது 30 சதவிகிதமாகக் குறைந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் 7000 இராணுவ துருப்புக்களை வைத்திருக்கிற அமெரிக்கா நிதி உதவி அளித்ததே தவிர, மருத்துவப் பணியாளர்களை அனுப்பவில்லை. 2016ல் ஒரு புதிய எபோலா தொற்றுகூட ஏற்படவில்லை என்ற நிலை உருவான பிறகே கியூப மருத்துவப் படை நாடு திரும்பியது. மருத்துவம் என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை, அதை அளிப்பது எனது கடமை என்ற உணர்வை கியூபா தன்னுடைய மருத்துவர்களின் மனதில் விதைத்துள்ளது. இன்றைக்கு வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான ஜி8 நாடுகள் ஒட்டுமொத்தமாக, உலக நாடுகளுக்கு உதவிக்காக அனுப்பும் மருத்துவர்களைக் காட்டிலும், கியூபா அதிக மருத்துவர்களை அனுப்புகிறது.
கேரளா
இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரளாவுக்கு ஜனவரி 30 அன்று வந்து சேர்ந்தும், கடந்த ஒன்றரை மாதங்களாக கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தொற்று பரவவில்லை. நிபா வைரஸ் தொற்று கேரளத்தை விட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொண்ட கேரளா இன்றைக்கு கொரோனோ கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கிறது. நம் நாட்டின் பிரதமர், ‘மக்கள் தங்களுக்குத் தாங்களே சுயக்கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும்; தேவையின்றி வெளியே போகாமல் இருக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். 90 சதவிகித இந்தியத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா துறைகளில் வேலை பார்க்கிறார்கள். வேலைக்குப் போக முடியவில்லை என்றால் சோறு இல்லை என்ற நிலையில் இருக்கிறார்கள். நிவாரணம் இல்லாமல் அவர்களால் எப்படி வீட்டுக்குள் அடைந்திருக்க முடியும்? இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள 7.5 கோடி டன்கள் தானியங்களை மக்களுக்கு மத்திய அரசு வழங்கலாம். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கியின் 1.76 லட்சம் கோடியை எடுத்து, கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கிய பிரதமர், நிவாரண உதவிகளைப் பற்றி வாயே திறக்கவில்லை.
இந்நிலையில் கேரளா எடுத்திருக்கும் நிவாரண நடவடிக்கைகள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள 20,000 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சமூக நலத் துறையின் உதவித்தொகை பெரும், 55 லட்சம் பேருக்கு, இரண்டு மாத உதவித்தொகையாக 2400 ரூபாய் முன்கூட்டியே வழங்கப்படும்; உதவித் தொகை பெறாத குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்காக 1320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்; அடுத்த இரண்டு மாதங்களில் ஊரக வேலைத்திட்டத்துக்கு ரூ 2000 கோடியும், சுய உதவிக் குழுக்களுக்கு 2000 கோடி கடன் ஒதுக்கப்படும். 20 ரூபாய் விலையில் 1000 உணவகங்கள் உணவு வழங்கும். (வறியவர்களுக்கு இலவசமாகவும் வழங்கப்படும்). அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவதற்கு 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தைப் புறந்தள்ளி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும், முதலாளித்துவ கொள்கையைக் கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில், கேரளா மட்டும் தற்போது வேறுபட்டு இருக்கிறது. காரணம், கேரளாவில் ஆட்சியில் இருப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீது, ஏழை மக்களின் மீது, மத்திய தர வர்க்கத்தின் மீது அக்கறை கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் இருப்பதுதான்.
கொரோனா உலகத்துக்குப் பல படிப்பினைகளை இன்றைக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனாவால் வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் உருக்குலைந்துவிட்டன. இத்தாலி நாட்டின் பீட்மாண்ட் நகர மக்கள் பாதுகாப்புத் துறை, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கமாட்டோம் எனப் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது. அமெரிக்காவில், மருத்துவம் என்பது முழுக்க முழுக்க தனியார்களிடமும், இன்சூரன்ஸ் கம்பெனிகளிடமும் இருப்பதால், அமெரிக்கர்கள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள். தனியுரிமை பேசும் இந்த முதலாளித்துவ நாடுகளால், மருத்துவம் என்பதை சேவையாகவும், மக்களின் உரிமையாகவும் பார்க்க முடியவில்லை. இருக்கின்ற அமைப்பை வைத்து, அவர்களால் தங்களுடைய மக்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. இந்தச் சூழலில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கும் சோஷலிச நாடுகளான சீனாவும், கியூபாவும், இந்திய மாநிலமான கேரளாவும் பின்பற்றிவரும், மருத்துவ சேவையை தனி மனிதருடைய உரிமையாகப் பார்க்கும் சோசலிச அணுகுமுறை மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இரண்டு உலகப் போர்களைக் காட்டிலும், பெரிய இழப்பை இந்தக் கொரோனா ஏற்படுத்தப்போகிறது. 90 சதவிகிதத்துக்கும் மேலாக உழைக்கும் மக்கள் இருக்கிற உலகம் இது. அவர்கள் உற்பத்தியில் ஈடுபட்டால் தான் மனித சமுதாயம் இயங்க முடியும். அவர்களுக்கு மூன்று வேளை சத்தான உணவை, சுகாதாரமான உறைவிடத்தை, மருத்துவத்தை, கல்வியை பிறப்புரிமையாக உறுதிசெய்தால் தான், உற்பத்தியே சாத்தியம். இல்லாவிட்டால் உற்பத்தி ஸ்தம்பித்து, பொருளாதாரம் படுத்துவிடும். இதை இந்தக் கொரோனா காலத்தில் உணரத் தொடங்கியுள்ளோம். சோஷலிசமே மாற்று, முதலாளித்துவம் ஏமாற்று என்பது நிரூபணமாகியுள்ளது. மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது என்பதை உலக மக்கள் உணர வேண்டிய காலம் இது.