கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்திலும்கூட, முஸ்லீம்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மதவெறித் தீயை விசிறிவிடுகிறவர்களைக் கடுமையாகத் தண்டித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராகக் கடும் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில்கூட முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித் தீ குறிவைத்து விசிறிவிடப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. மோசமான துஷ்பியோகங்களை, சமூக ஊடகங்களில் ஆளும் கட்சியின் ஆதரவுப் பேர்வழிகள் பதிவேற்றம் செய்துகொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்கள் அடிப்படை அரசமைப்புச்சட்ட ஷரத்துக்களை மீறுகிறார்கள். இத்தகைய குற்றங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மத்தியில் ஆளும் கட்சியின் அரவணைப்புடன் நடைபெறும் இத்தகைய மதவெறி வெறுப்புப் பிரச்சாரம் வெளிநாடுகளில் வாழும் பல லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரங்களை இடருக்குள்ளாக்கி இருக்கிறது. சென்ற ஆண்டான 2019இல் மட்டும், வளைகுடா நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் உத்தரப்பிரதேசம், பீகார், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் மேற்கு வங்கத்தில்ருந்து சுமார் மூன்று லட்சம் இந்தியர்கள் சென்று தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். உலகில் பல நாடுகளில் இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் இந்திய வம்சாவழியினர் எண்ணிக்கை சுமார் 1 கோடியே 75 லட்சம் ஆகும்.
மத்திய அரசாங்கம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் ஷரத்துக்களைப் பயன்படுத்தி, கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தைச் சீர்குலைக்கும் விதத்தில், இவ்வாறு மதவெறி நஞ்சை உமிழும், உயர்ந்த பீடங்களில் அமர்ந்திருக்கின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட செயல்பட்டுவரும் அனைவருக்கு எதிராகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மத்திய பாஜக அரசாங்கம், நாட்டில் வாழும் அனைத்து இந்தியர்களின், வாழ்க்கை மற்றும் சுதந்திரம், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது அவர்கள் ஊனமுற்றவர்களாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் பரிசீலித்திடாமல் அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் அளிப்பது அடிப்படை உரிமை என்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களின் உரிமை மீறப்படுவதை அனுமதிக்க முடியாது மற்றும் அனுமதிக்கக் கூடாது.
இத்தகைய பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சட்டம், சிறுபான்மையினருக்கு எதிராக மட்டும் குறிவைத்துத் தாக்கப்படுவது போன்றே தோன்றுகிறது. இத்தகைய வெறுப்பை உமிழ்பவர்களுக்கு எதிராக பேசும் இதழாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் மற்றும் தண்டிக்கப்படுகிறார்கள். இவ்வாறான வெறுப்பை உமிழும் பிரச்சாரங்களை சில அரசு ஆதரவு ஊடகங்கள் கிளிப்பிள்ளை போன்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கின்றன. இதனை ஏற்க முடியாது.
இத்தகைய கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)