கேரளா மாநிலம் பாலக்காட்டு பகுதியில் யானை உயிரிழந்த விவகாரத்தில் சங்பரிவாரஅமைப்பினர் மத வெறுப்புணர்வை தூண்ட முயற்சித்து வருகின்றனர். இதற்கு கேரள முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றித் திறிந்த யானை வெடிமருந்து இருந்த பழத்தை தின்றது. யானையின் வாயிலேயே வெடிபொருட்கள் வெடிக்கத்தொடங்கியாதால் யானை பலத்த காயம் அடைந்தது. இதையடுத்து யானை அருகில் இருந்த வெள்ளியாற்றில் இறங்கியது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை ஆற்றில் இருந்து வெளியேற்ற முயன்றனர். கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. ஆனால் முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் யானை ஆற்றிலேயே உயிரிழந்தது. இதையடுத்து யானையின் சடலத்தை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
யானையை மீட்பு பணியில் ஈடுபட்ட மோகன் கிருஷ்ணன் என்ற வனத்துறை அதிகாரி, முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து சமூக வலைதளங்களில் யானையின் மரணம் அதிர்வலைகளை எழுப்பியது.
இதையடுத்து பாஜக எம்பியான மேனகா காந்தி, இதுபோன்ற வன்முறைகள் மலப்புரத்தில் சாதாரணமானவை என்றும், சாலைகளில் விஷம் தூவி பறவைகள், விலங்குகள் கொல்லப்படும் என்றும் குற்றம்சாட்டினார்.
கோஹ்லி, தோனி, சாய்னா நேஹ்வால் மற்றும் பல திரை நட்சத்திரங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார அமைப்பினர் உள்நோக்கத்துடன் அம்மாநில அரசை விமர்சிக்கத் தொடங்கினர். RIP HUMANITY என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. பல பதிவுகளில் கேரள மக்கள் மற்றும் அரசு மீது குற்றம் சாட்டும் வன்மம் நிறைந்திருந்தது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வெடிமருந்தை உணவில் கலந்து கொடுப்பது இந்திய கலாச்சாரமல்ல என்றும், குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என்றார்.
இந்நிலையில் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, “கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம்” என வழக்கம் போல் மத வெறுப்பை தூண்டும் வகையில் கூறினார்
இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
"யானை உயரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துயர நிகழ்வின் பின்னணியில் கேரளாவுக்கு எதிராகவும், மலப்புரத்துக்கு எதிராகவும் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களே தவறான பரப்புரையை முன்னெடுக்கின்றனர். பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
முதல் கட்ட விசாரணையில் காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க வைக்கப்பட்ட வெடியை யானை தவறுதலாக சாப்பிட்டதே உயிரிழக்க காரணம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை உயிரிழந்தது பாலக்காடு மாவட்டம் தானே தவிர மலப்புரத்தில் அல்ல. யானையின் உயிரிழப்பு மே 27 ம் தேதி நடந்தது என்று வனத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் யானை உயிரிழப்பில் தொடர்புடைய வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.