tamilnadu

img

அனைத்தையும் மூடுவதன் ஆபத்து!

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா இரண்டு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒன்று, சுகாதார நெருக்கடி மற்றொன்று பொருளாதார நெருக்கடி. பாதிக்கப்பட்டோரை பொறுத்த மட்டில் சுகாதார நெருக்கடி இன்னும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் 80 லட்சம் மக்கள் இறந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இதுவரையிலும் இந்த வைரசால் 7பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இங்க வேகமாக உயர்கிறது. இதற்கிடையில் பொருளாதார நெருக்கடி அனைத்து வகைகளிலும் தீவிரமாக தாக்கியிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்களை வேலையிலிருந்து விரட்டியிருக்கிறது. சுகாதார நெருக்கடியைப் போல் அல்லாமல் இது ஏழை மக்களையே பெரும்பாலும் கடுமையாக பாதித்திருக்கிறது.

இந்திய பொருளாதார மந்தம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தெருக்களில் இருப்பவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பொருளாதார சுனாமியால் மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். உழைக்கும் மக்களில் இவர்கள் தான் பெரும்பான்மையானவர்கள். மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக லே ஆப் செய்யப்பட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பலரும் சம்பளம் இன்றியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோனார் மகாராஷ்டிராவுக்கும், சொந்த ஊர்களுக்கும் இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் தொழில் நிறுத்தம் இதர மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், கடைகளுக்கும், அலுவலகங்களும், வேலை தளங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. விரைவில் மீட்சி பெறும் என்று நம்ப வாய்ப்பில்லை. போக்குவரத்து சீர்குலைந்திருக்கிறது. அறுவடை செய்யப்பட்ட கோதுமையும் கூட வீடுகளுக்கு கொண்டு வர முடியவில்லை. வட இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு இதுவே வாழ்வதற்கான அடிப்படையாகும். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே.

இந்த பொருளாதார நெருக்கடி உடனடியான, தீவிரமான நிவாரண நடவடிக்கைகளை நிர்ப்பந்திக்கிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உடனடியான கதவடைப்புகள் அவசியம் தான். ஆனால், ஏழை மக்களால் வேலை செய்யாமல் வீட்டிலிருக்க முடியாது. அவர்களை வீட்டில் இருக்கச் சொன்னால் அவர்களுக்கு உதவி தேவை. இந்த பிரச்சனையில் இந்தியாவுக்கும், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. அந்த நாடுகளில் எல்லாம் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் சிறப்பானவையாக இருக்கின்றன. உதாரணமாக, கனடாவிலோ, இத்தாலியிலோ குறைந்தபட்சம் சிறிது காலத்திற்காவது இத்தகைய கதவடைப்புகளை சராசரி மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு கிட்டத்தட்ட இது சாத்தியமில்லை.

சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துக!

நேரம் மிக முக்கியமானது. எனவே, நடப்பில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஏழைகளுக்கு உதவும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஓய்வூதியத் திட்டங்கள், பொதுவிநியோகத்திட்டங்கள், மதிய உணவுத்திட்டம், கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களை உடனடியாக, சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஆரம்ப நடவடிக்கையாக ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும். பொதுவிநியோக பொருட்களை அதிகரிக்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்ட பாக்கிகளை உடனடியாக கொடுக்க வேண்டும். பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும் கொடுக்கும் உணவுப் பொருட்களை அதிகரிக்க வேண்டும். சில மாநிலங்கள் இந்த வகையில் உபயோகமான சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஆனாலும் நிவாரண நடவடிக்கைகள் கூடுதல் வேகத்தில் விரிவுபடுத்தப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி உதவி செய்யப்பட வேண்டும். மத்திய அரசு தனது நிதியை கார்ப்பரேட்டுகளை கரையேற்றிவிட அள்ளி இரைக்கக் கூடாது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளும் மீட்புகளுக்காக அரசாங்கத்திலும் தங்கள் துறைக்கு நிதியளிக்க ஆதரவை திரட்டுவார்கள்.

இதற்கிடையே பொதுமக்களின் துயரங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஏனெனில் அத்தியாவசிய தேவைகளைக் கூட மூடும் முனைப்புகள் தென்படுகின்றன. பொதுப்போக்குவரத்து, நிர்வாக அலுவலகங்கள், நீதிமன்ற விசாரணைகள், கிராமப்புற வேலை உத்தரவாத திட்டங்கள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு அளவுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் சில நடவடிக்கைகள் சரியானவையே. ஆனால் வேறுசில நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி விடும். நாம் சுகாதார நெருக்கடியை மட்டுமல்ல, ஒரு பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொது சேவைகளை நிறுத்துவது, சுகாதார நெருக்கடியை தணிக்க உதவும் தான். அதேசமயம் அதனால் ஏற்படுகிற பொருளாதார விளைவுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரண்டு நோக்கங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்க வேண்டுமென்று சொல்லும் போது அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தன்னை பாதுகாத்துக் கொள்வது, மற்றொன்று சமூகத்தை பாதுகாக்கும் நோக்கம். முதல் விஷயத்தை பொறுத்தமட்டில் தாங்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு விடுவோம் என்கிற பயம். இரண்டாவது அம்சம் ஒட்டுமொத்தமாக வைரஸ் பரவுவதை தடுக்கும் கூட்டு முயற்சி.

பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தன்னை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறார்கள். தனி நபர் பாதிக்கப்படுவார் என்பதற்கான அபாயம் மிகக் குறைவானதே இருக்கிறது. சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சிலரை தவிர இது மிகக் குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் நான்கு லட்சம் பேர் எலும்புருக்கி நோயால் இந்தியாவில் இறந்து போகிறார்கள். இருப்பினும், அதற்காக சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் நாம் மேற்கொள்ளவில்லை. எனவே, 7 பேர் இறந்து போனதற்காக எதற்காக இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் இதுதான். இது, தனி மனிதர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அல்ல. அந்த வைரஸை ஒட்டுமொத்தமாக எதிர்கொள்வதற்கான கூட்டு நடவடிக்கை இது.

கற்பனைத் திறன் மிக்க நடவடிக்கைகள் தேவை

இதேபோன்ற காரணம் பொதுசேவைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுவதற்கும் பொருந்தும். பொதுசேவகர்களின் தற்காப்பு நடவடிக்கை தற்காலிகமாக முக்கியமான பிரச்சனையல்ல. தற்போதைய முக்கியத்துவம் பொதுநோக்கம் தான். மேலும், பொதுநோக்கம் என்பது ஒட்டுமொத்த கதவடைப்பால் ஏற்படும் பொருளாதார விளைவுகளையும் உள்ளடக்கியது. ஒரு சேவை தீவிரமான சுகாதார கேட்டை ஏற்படுத்தும் என்றால் அந்த பொதுச்சேவையையே உடனடியாக தற்காலிகமாக நிறுத்தலாம். அந்த வகையில் தான் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கின்றன. அதேசமயம், பொதுமக்களுக்கு அவசியமான நேரங்களில் தேவைப்படும் வசதிகள் பெரிய அளவிற்கு சுகாதார நெருக்கடிகளை ஏற்படுத்தா வண்ணம் தொடர வேண்டும். இது பொதுசுகாதார சேவைகள் அல்லது பொதுவிநியோக முறைக்கு மட்டுமின்றி மாவட்ட அளவிலான, உள்ளூர் அளவிலான நிர்வாக சேவைகளுக்கும் பொருந்தும். பொதுமக்களுக்கு இந்த சேவைகள் பல வகைகளில் அவசியப்படும். இத்தகைய துறைகளை மூடுவது சுகாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பதிலாக, பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தி சிரமங்களை உருவாக்கும்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுசேவைகளை தொடரச் செய்வதற்கு சில முன்முயற்சியும், படைப்புத் திறன்களும் தேவை. சில மாநிலங்கள் ஏற்கனவே வைத்திருப்பது போன்ற வெளிப்படையான அடிப்படை சேவைகள் மற்றும் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ வழிமுறைகள், பணியிடங்களில் தயாரிப்புகள் போன்றவை நல்ல துவக்கமாக இருக்கும். பொதுமக்கள் கூடும் பல இடங்களில் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இன்னும் இல்லாமல் இருக்கின்றன. சில சேவைகளுக்கு புதிய வழிமுறைகளை கண்டறியலாம். உதாரணமாக, இதுபோன்ற தருணங்களில் மக்களை சென்றடைவதற்கு அங்கன்வாடிகள் நல்ல பங்களிப்பை செய்ய முடியும். மாணவர்களைக் கூட அங்கன்வாடிகளுக்கு வராமல் தவிர்த்து விடலாம். வேறுசில பொது இடங்களை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்திகளை சொல்வதற்கும், கைகழுவுதல், தூர இருத்தல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம். சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய வேண்டிய மிகத் தீவிரமான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதைச் செய்யவில்லை என்றால் மிக கடுமையான இழப்புகளை நாம் சந்திப்போம். இன்று நடைபெறும் விசயங்களை கவனித்தால் சில மாநில அரசுகளுக்கு பொதுவிநியோக முறையையோ அல்லது குடிநீரையோ விநியோகிப்பது கூட சிரமமாக மாற வாய்ப்புண்டு. இது இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடியையும் அதேபோன்று சுகாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புண்டு.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள பலவீனங்கள் வெளிப்படுவதற்கான நேரம் இதுவல்ல.

நன்றி:

If the poor must stay at home, they need income support and essential services

ஜீன் ட்ரீஸ் தி இந்து 23.3.2020ன்
தமிழில் க.கனகராஜ்

-