திருவனந்தபுரம்:
கோவிட் தொற்று நோயால் இறந்தவரின் முகத்தைப் பார்க்க பாதுகாப்புவிதிமுறைகளுக்கு இணங்க நெருங்கியஉறவினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலாஜா தெரிவித்தார். இறந்தவரது உடல் கவசத்தில் முகத்தின் அருகில் உளள ஜிப்பைத் திறந்து, நெருங்கிய உறவினர்களுக்கு முகத்தைக் காண்பிக்க இதன்மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: கோவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய எஸ்ஓபி, இறந்த உடல் மேலாண்மை மற்றும் பிற விசயங்கள் குறித்த வழிகாட்டுதல்களை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டால், உடலில் இருந்து நோய் விரைவாக பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உடலைப் பார்க்கவோ, தகனம் செய்யவோ கூடாது. நோய் பரவாமல் தடுக்க அனைவரும் வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்ற வேண்டும் என்றார்.கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்த ஒருவரின் உடலை அருகில்பார்க்கக்கூடாது. மற்ற சமய விழாக்களான மத நூல்களை ஓதுவது, மந்திரங்களை சீரான இடைவெளியில் உச்சரிப்பதுபோன்றவை உடலைத் தொடாமல் செய்ய முடியும். எந்த சூழ்நிலையிலும் சடலத்தைத் தொடவோ, குளிப்பாட்டவோ, முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ கூடாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பிற நோய்கள் உள்ளவர்கள் சடலத்துடன் நேரடியாக எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது.இறுதிச் நிகழ்ச்சியில் மிகச் சிலரே கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க சடலங்களை ஆழமாக புதைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வை உள்ளூர் சுகாதாரத் துறைஅதிகாரிகளால் நேரடியாக வழங்கப்படும்.
கோவிட்டில் பாதிக்கப்பட்ட நோயாளியின் மரணம் ஏற்பட்டால், பயிற்சி பெற்ற மருத்துவமனை ஊழியர்கள் உடலை மூன்று அடுக்குடன் போர்த்தி, அதை கிருமி நீக்கம் செய்து ஒரு தனி இடத்தில் வைக்க வேண்டும். இறந்தஉடல்களை மூடவும், கிருமி நீக்கம்செய்யவும், கையாளவும் ஊழியர்களுக்கு மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சடலங்களுடன் தொடர்பு கொள்பவர்கள் பிபிஇ கிட்போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்.சுகாதார ஊழியர்களின் உதவியுடன், உடலை சரியான தயாரிப்புடன் அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டுவர வேண்டும். இறுதி நிகழ்ச்சிகள் முடிந்தபின் உடலைச் சுமக்கும் வாகனங்கள்மற்றும் கட்டமைப்புகள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். பணியில் உள்ளகல்லறை ஊழியர்கள் மற்றும் விடுப்பு தகவல்களை துல்லியமாக பதிவு செய்துவைத்திருக்க வேண்டும். ஊழியர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்யும் போதும், முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணியும்போதும் பாதுகாப்புத் தரத்தை பின்பற்ற வேண்டும். இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் படி வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.