tamilnadu

img

ரேகா ஷர்மா, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.... அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை

புதுதில்லி:
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர்ரேகா ஷர்மா, மிக அப்பட்டமாக மதவெறிக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என்றும், இது மிகவும் ஆட்சேபகரமானது என்றும், இந்த நபர் உடனடியாக இப்பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர்திருமதி ரேகா ஷர்மா, மகாராஷ்டிர மாநில ஆளுநரை அக்டோபர் 20 அன்று சந்தித்தபோது, “புனித ஜிகாத்” (“Love Jihad”) குறித்தும், இரு மதத்தினருக்கிடையேயான திருமணங்கள் பிரச்சனையை உருவாக்குகின்றன என்றும்ஆட்சேபகரமான முறையில் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இதேபோன்று கடந்த காலங்களிலும் இவர் பெண்ணின எதிர்ப்பாளராகக் கருத்துக்களை உமிழ்ந்திருக்கிறார். இதேபோன்ற நபர் ஒருவர், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில்,  தேசிய மகளிர் ஆணையத்திற்குத் தலைவராக இருப்பது வெட்கக்கேடாகும். தேசிய மகளிர் ஆணையத் தலைவரே பாஜகவின், அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரான, மனு(அ) தர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் மதவெறிக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதால், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக எதுவும் கூறாது மவுனம் கடைப்பிடிப்பதில் அதிர்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை.

மூடி மறைக்க துணைபோகிறார்
ரேகா ஷர்மா, ஹத்ராஸ் வழக்கில் காவல்துறையினரும், உ.பி.அரசாங்கமும், அதன் நிர்வாகமும் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு எதிராக இழைத்துள்ள அநீதிக்கு எதிராக அவற்றைக் கண்டித்து ஒருவார்த்தை கூடஉதிர்த்திடவில்லை. இதுபோன்ற குற்றங்களைக்கட்டுப்படுத்திட, ‘சமூக சீர்திருத்தம்’ வேண்டும் என்று மட்டும்தான் பரிந்துரைத்திருக்கிறார். இதன்மூலம் இக்குற்றத்தை மூடி மறைத்திடஉ.பி. அரசாங்கம் மேற்கொண்ட அனைத்துநடவடிக்கைகளுக்கும் அவரும் துணைபோகிறார்.தேசிய குற்றப்பதிவேடு நிலையம் (NCRB), அளித்துள்ள 2019ஆம் ஆண்டு தரவுகள், பெண்களுக்கு எதிராகக் கொடூரமான குற்றங்கள் மிகவும் அதிக அளவில் பாஜக ஆளும் உ.பி.மாநிலத்தில்தான் நடந்துகொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.   தேசிய மகளிர் ஆணையம், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் 1992இல் மத்திய அரசால்  நிறுவப்பட்ட சட்டரீதியான அமைப்பாகும். இதன்குறிக்கோள் நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், அவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதுமாகும். ஆனால், ரேகா ஷர்மா, பெண்களுக்கு எதிராக சாதி அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ பாகுபாடு காட்டக்கூடாது என்கிற அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துக்களை மீறியிருக்கிறார். நம் அரசமைப்புச்சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமையின்படி 18 வயது நிரம்பிய எந்தவொரு பெண்ணும் தான்விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொள்ள முடியும்.

பாஜகவின் ஊது குழலாக
ரேகா ஷர்மா, பெண்களின் பிரச்சனைகளுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவ்வகையில் தன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக,  பாஜக-வின் ஊதுகுழலாகவே செயல்பட்டிருக்கிறார்.  அவருடைய செயல்பாடுகளும், அறிக்கைகளும், தேசிய மகளிர் ஆணையத்தின் கட்டளை மற்றும் பங்கினை மீறியுள்ளன.எனவே, இதற்காக அவர் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. மேலும், அவர்உடனடியாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், தேசிய மகளிர் ஆணையத்தை அனைத்துப் பெண்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் சுயேச்சையான அமைப்பாகச் செயல்படக்கூடிய விதத்தில்மாற்றியமைத்திட துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்கள். (ந.நி.)