tamilnadu

img

ரயில்வே அரசின் சொத்துதான் ; ஆனால் சேவைகளை தனியார் வழங்குவர்

நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பதில்

புதுதில்லி,நவ.23-  ரயில்வே அரசின் சொத்துதான்;ஆனால் ரயிலில் சேவைகளை தனியார் வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வினோத பதில் அளித்துள்ளார்.  பெரும் முதலாளிகளுக்கு விசுவாசமாக செயல்படும் மோடி அரசு பின்பற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு நெருக்கடியில் சிக்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல்  ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய தீவிரமான  நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அரசியல் கட்சியினர் மோடி அரசை கண்டித்து வருகின்றனர். ரயில்வே துறையை தனியாருக்கு விற்க ரயில்வே தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே  தனியார்மயம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதிலளிக்கையில், பயணிகளுக்கு சிறப்பான சேவைகளையும்  நன்மைகளையும் அளிப்பதுதான் நோக்கம். ரயில்வேயை தனியார் மயமாக்குவது அல்ல. இந்திய ரயில்வே, அரசின் சொத்தாக, இந்திய மக்களின் சொத்தாக எப்போதும் தொடரும். ஆனால் பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை வழங்குவதற்காக வணிகம் மற்றும் ரயிலில் பயணிக்கிறபோது கிடைக்கிற சேவைகளை தனியார் மூலம் பெறுகிறோம்.  

தினந்தோறும் உறுப்பினர்கள் புதிய வழித்தடங்கள், சிறப்பான சேவைகள் என புதிய கோரிக்கைகளுடன் வருகின்றனர். அடுத்த 12 ஆண்டுகளுக்கு இந்த வகையில் ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதை வழங்குவது மத்திய அரசுக்கு சாத்தியம் இல்லை. பட்ஜெட் கட்டுப்பாடுகளும், பிற உண்மையான பிரச்சனைகளும் உள்ளன. பயணிகள் வசதிக்காக புதிய ரயில்களை இயக்க ஆயிரக்கணக்கான ரயில்களும், கூடுதலான முதலீடுகளும் தேவைப்படுகின்றன. முதலீடு செய்வதில் தனியார் துறையினர் ஆர்வமாக இருந்தால் வரலாம். தற்போதைய அமைப்பில் சேர்ந்து இயங்கலாம். இதன் மூலம் நுகர்வோரும், பயணிகளும் பயன்அடைவார்கள் என்று தெரிவித்தார். 

சிறப்பான சேவையை தனியார் வழங்குமாம்

இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கூறுகையில்,  வணிக ரீதியிலான சேவைகளையும், ரயிலில் ஏறிய பின்னர் பயணிகளுக்கு தேவைப்படுகிற சேவைகளையும் தனியார் துறையினரிடம் இருந்து பெறுகிறோம். இதன் உரிமை ரயில்வே துறைக்குத்தான். நாங்கள் உரிமங்களை மட்டுமே அளிக்கிறோம். அவர்கள் புதிய கட்டணங்களை கொண்டு வருகிறார்கள்.தற்போது ரயில்வேயில் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லை. தனியார் துறையினர் சிறப்பான சேவைகளை வழங்குவார்கள். கூடுதலான வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவார்கள். ரயிலில் சேவை வழங்குகிற தனியார் பற்றி புகார்கள் வந்தால் ரயில்வே அதிகாரிகள் அவற்றை கவனிப்பார்கள் என்று தெரிவித்தார்.