tamilnadu

img

தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன

புதுதில்லி, ஜூலை 18-

தமிழ்நாட்டில் மதுரை, சென்னை எழும்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேட்டிருந்த கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சு. வெங்கடேசன், நாட்டில் புல்லட் டிரெயின் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்றும், தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்படும் ரயில் நிலையங்களின் விவரங்கள் என்ன என்றும், மேலும் தமிழ்நாட்டில் மேம்படுத்தப்படுகிற மற்றும் நவீனமயப்படுத்தப்படுகிற ரயில் நிலையங்கள் எவை என்றும் கேட்டிருந்தார்.

இவற்றுக்கு எழுத்துமூலம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது:

புல்லட் டிரெயின் திட்டத்தைப் பொறுத்தவரை இதனை நிறைவேற்றுவதற்காக,  தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று தனியே ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது இதற்குத் தேவையான ஆய்வுகளையும், நிலம் கையகப்படுத்தலையும் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் 346 கி.மீ. அகல ரயில்பாதையாகவும், 464 கி.மீ. நீளம் இரட்டிப்பு ரயில் பாதையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

“ஆதர்ஷ் ஸ்டேஷன்” திட்டத்தின்கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் அரியலூர், திருவெறும்பூர், தேனி (2014-15), பீளமேடு, கூடல் நகர், பாம்பன் (2015-16), இருகூர், வேளுர் கண்டோன்மென்ட் (2016-17), ராயபுரம் (2017-18), காட்பாடி (2018-19), காஞ்சிபுரம் (2019-20) ஆகிய 11 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.

2018-19ஆம் ஆண்டில் நிலையத்தின் மென்மையான மேம்பாட்டு திட்டத்தின் (“Soft-Upgradation of Station”)கீழ்,  மதுரை, சென்னை எழும்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அமைச்சர் கூறியிருக்கிறார்.

(ந.நி.)