tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டம்: மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரியங்கா காந்தி தர்ணா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பிரியங்கா காந்தி இந்தியாகேட் அருகில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். 
மத்திய அரசு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்தியது. மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இதைத்தொடர்ந்து தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் உரிய அனுமதியின்று காவல்துறை நுழைந்ததற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தில்லியில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருடன் கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோணி, அகமது படேல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.