குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதற்கு எதிராகவும், அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தன. அதன் ஒரு பகுதியாக இன்று (வியாழக்கிழமை) புதுதில்லி, மண்டி ஹவுசிலிருந்து நாடாளுமன்ற வீதி (ஜந்தர்மந்தர்) நோக்கி பேரணி செல்ல இடதுசாரிக் கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
எனினும், இன்று தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணியில் செல்வதற்காக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், ஹன்னன்முல்லா முதலானவர்கள் மண்டி ஹவுசிலேயே கைது செய்யப்பட்டு, பேருந்தில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர். பேரணியில் செல்வதற்காக வந்த மக்களும் பேரணியில் செல்லாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தில்லியில் ஊரடங்கு உத்தரவுபோன்று நிலைமையைத் திணித்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இது நாட்டின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். இதன்மூலம் பாஜக அரசாங்கம் தன் உண்மை சொரூபத்தை காட்டியிருக்கிறது என்றார்.
மெட்ரோ ரயில்கள் முக்கிய ஸ்டேஷன்களில் நிற்கவில்லை
பேரணிக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தில்லியின் 14 மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில் கதவுகளை தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் மூடிவிட்டது. இன்று காலையிலேயே ஜமியா மிலியா, ஜமா மசூதி, முனீர்கா மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்களை மூடியது. பின்னர் பட்டேல் சவுக், லோக் கல்யாண் மார்க், உத்யோக் பவன், சென்ட்ர்ல் செக்ரடேரியர், ஐடிஓ, பிரகதி மைதான், கான் மார்க்கெட் மெட்ரோ நிலையங்களின் வாயில் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிற்கவில்லை.
மொபைல் போன் சேவைகள் துண்டிப்பு
மொபைல் சர்வீஸ் அளித்திடும் ஏர்டெல், வோடாஃபோன் ஆகிய நிறுவனங்கள், தங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தில்லியின் சில பகுதிகளில் வாய்ஸ் மற்றும் தரவு தொடர்பு (voice and data connection) சஸ்பெண்ட் செய்யுமாறு கட்டளை வந்துள்ளதால் அவ்வாறே செய்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கின்றன.