புதுதில்லி:
நாடாளுமன்றத்தில், வெங்காயவிலை உயர்வு குறித்த எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, “நான் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து நான் வந்திருக்கிறேன்; எனக்கு வெங்காய விலை உயர்வு குறித்து பெரிதாக தெரியாது” என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார்.இந்நிலையில், பாஜக-வைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான அஸ்வினி குமார் சவுபே-யும், இதே வகையில் பேசியுள்ளார்.நாடாளுமன்றத்திற்கு வெளியேசெய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்துள்ள அஸ்வினி குமார், “நான்சைவ உணவு சாப்பிடுபவன். வெங்காயத்தை நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. என்னைப் போன்றவர்களுக்கு வெங்காயத்தின் விலைப் பற்றி எப்படி தெரியும்?” என்று கேட்டுள்ளார். வெங்காய விலை உயர்வு குறித்த மக்களின் கவலையை, அவர்களின் கோரிக்கையை மிகவும் மோசமான வகையில் கேலி செய்துள்ளார். போகிற போக்கில், வெங்காயத்தை அசைவப் பட்டியலிலும் அஸ்வினி குமார் சேர்த்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனையில், மத்திய பாஜக அமைச்சர்கள், தாங்கள் சார்ந்த பிராமணர் சாதியின் உணவுப் பழக்கவழக்கத்தைக் குறிப்பிட்டு, நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட ஏழை உழைப்பாளி மக்களை கொச்சைப்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும் எழுந்துள்ளன.