சென்னை:
உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்கொடூரங்களைக் கண்டித்தும் இச்சம்பவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்தும் அக்டோபர் 2 அன்று மாநிலம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி வயல்வேலைக்கு சென்ற 19 வயது தலித் பெண்அதே கிராமத்தை சேர்ந்த சாதி ஆதிக்கவெறியர்கள் நான்கு பேரால் கொடூரமாகபலாத்காரம் செய்யப்பட்டு கடும் காயங்களுடன் 2 வாரங்கள் உயிருக்குப் போராடி செப்டம்பர் 30 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் முதுகெலும்பும்,கால் எலும்புகளும் முறிக்கப்பட்டதோடு நாக்கும் துண்டிக்கப்பட்டுள்ளது.உயிருக்குப் போராடிய நிலையில் அப்பெண் செப்டம்பர் 14 ஆம் தேதி அலிகார் ஜவஹர்லால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கொடும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான உபகரணங்கள் இல்லாததால் அவளது பெற்றோர் தில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ கெஞ்சியும் செப்டம்பர் 28 ஆம் தேதி உடல் நிலை மிகமோசமடைந்ந நிலையில் தான் தில்லி ஷப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.முறையான சிகிச்சை அளிக்காததோடு இறந்த பின்னும் கௌரவமற்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரது உடலை வீட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுத்து குடும்பத்தினரை வீட்டுக்குள் அடைத்து வைத்துவிட்டு காவல் துறையே உடலை எரித்துள்ளது.காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் சாதிய ஆதிக்க உணர்வோடு செயல்பட்டுள் ளதையே இது காட்டுகிறது.
அதே மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயதுடைய மற்றொரு தலித் பெண் இரண்டு தினங்களுக்கு முன்பு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். 2018 ஆம் ஆண்டு இந்திய முழுவதிலும் நடந்துள்ள தலித்துகள்மீதான வன்முறையில் 22.38 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளன. பெண்கள் மீதான வன்முறைகளிலும் உத்தரப்பிரதேசமே முதலிடத்தில் உள்ளது.குறிப்பாக யோகிஆதித்யநாத் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், தலித்துக்கள் மீதானவன்முறைகள் பெருமளவு அதிகரித்துள்ளன.
மனுவாத கொள்கைகளை கொண்ட பாஜகவின் யோகி அரசு சாதி ஆதிக்கத்தையும், ஆணாதிக்கத்தையும் நிலைநாட்ட இத்தகைய வன்முறையாளர்களை பாதுகாப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் பெண்கள், தலித்துகள் மீதான வன்முறைகளை ஜனநாயக மாதர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வன்மையாகக் கண்டிக்கிறது.இவ்வழக்கில் குற்றவாளிகள் கடுமையாகவும் விரைவாகவும் தண்டிக்கப்பட, உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணையை நடத்திட வேண்டும். உண்மைகளையும், சாட்சிகளையும் மறைக்க முயற்சி செய்த காவல்துறையினர், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை விசாரணைக்குட்படுத்தி உடனடியாக பணி இடைநீக்கம் செய்திட வலியுறுத்தி அக்டோபர் 2 அன்று மாநிலம் முழுவதிலும் கண்டன இயக்கங்களை நடத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.