tamilnadu

img

மார்ச் 22 - மக்கள் ஊரடங்கு

நாடு முழுவதும் யாரும் வெளியே வர வேண்டாம்

பிரதமர் வேண்டுகோள்

புதுதில்லி, மார்ச் 19- கரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றினார்.  கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தயார்நிலை குறித்து உயரதிகாரி களுடன் பிரதமர் மோடி புதுதில்லியில்  ஆலோசனை மேற்கொண்டார். அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் வியாழனன்று (மார்ச் 19) இரவு 8மணிக்கு கொரோனா பாதிப்பு சூழல் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து தொலைக்காட்சியில் நாட்டுமக்களிடம் உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்கள்:

வரும் ஞாயிறன்று (மார்ச் 22)  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.அன்று நாம் அனைவரும் சுயகட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வோம். அன்று மாலை 5மணிக்கு வீட்டு வாசலில் நின்று கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கைதட்டுதல் மற்றும் மணி அடித்தல் மூலமாக நன்றி தெரிவிக்கவேண்டும். அத்தியாவசிய சேவையில் பணிபுரிவோர் தவிர வேறு யாரும் ஞாயிறன்று வெளியே செல்லவேண்டாம்.

மருத்துவர்கள், ஊடகத்துறையினர் மற்றும் இதர அத்தியா வசிய பணிகளில் ஈடுபடுவோரை பொதுமக்கள் தொந்தரவு செய்யக்கூடாது. கொரோனா வைரஸ் நம்மை ஒன்றும்செய்யாது என்று நினைக்காதீர்கள். நோய்க்கு ஆளாகாதீர்கள்; அதேசமயம் நோயை பரப்பவும் செய்யாதீர்கள். மக்கள் அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து  வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். மக்கள் தங்களைத் தாங்களே ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் இந்தியாவைப் பாதிக்காது என்று நினைப்பது தவறு. கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை.  மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது மிக முக்கியம். இது உலகப்போரை விட மிக மோசமான தாக்குதலாகும். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் சந்தித்த இழப்புகளை விட கொடிய பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்   கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் அச்சுறுதலைச் உலகம் சந்தித்து வருகிறது.  முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.வேலையில்லாத காலத்திற்கு நிறுவனங்கள் ஊதியத்தை பிடிக்கவேண்டாம்.அச்சத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.