tamilnadu

img

உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர் குறித்த தகவல்கள் இல்லாததால் இழப்பீடும் இல்லையாம்

உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இல்லாததால் இழப்பீடும் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி புலம் பெயர் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊர் திரும்பினர். அவ்வாறு சென்றவர்களில் பலர் நடந்து கொண்டிருந்தபோதே வழியிலேயே உயிரிழந்தனர். 
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு முடக்கம் விதிக்கப்பட்டதிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து அரசாங்கத்திடம் ஏதேனும் தரவு இருக்கிறதா என்றும், அவர்களுக்கான இழப்பீடுகள் குறித்தும் அரசிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன
1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்ததாக மத்திய அமைச்சகம் ஒப்புக்கொண்டது. ஆனால் தனது எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்தது குறித்து எவ்வித தகவல்களும் அரசாங்கத்திடம் இல்லை. எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாது. எனவே அவர்களுக்கான இழப்பீடு அல்லது நிவாரணம் குறித்து எந்த அவசியமும் ஏற்படவில்லை என  தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், "பூட்டப்பட்ட காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர், எத்தனை வேலைகள் இழந்தன என்பது மோடி அரசுக்குத் தெரியாது. நீங்கள் கணக்கிடவில்லை என்றால், இறப்புகள் நடக்கவில்லையா? அரசாங்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர்களின் இறப்பை உலகம் கண்டது. எந்த தகவலும் இல்லாத ஒரு மோடி அரசு உள்ளது" என சுட்டி காட்டி உள்ளார்.