நீட் தேர்வு முடிவு பட்டியலில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் திருத்தம் செய்யப்பட்ட பட்டியல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் நேற்று தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகள் மாநில வாரியாக புள்ளிவிவரப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் திரிபுரா, உத்தராகண்ட் மாநில பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரிபுரா மாவட்டத்தில் 3,536 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் திரிபுராவில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 37,301 பேர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் பட்டியல் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது மீண்டும் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் 3536 பேர் தேர்வு எழுதிய சூழலில் 1738 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 156992 பேர் தேர்வு எழுதியதில் 88889 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட தவறு என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது .