tamilnadu

img

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு - கருத்துகளை தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது தொடர்பாக  கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த வரைவு அறிக்கை முற்றிலும் கல்வி விரோதமானது. ஏழை - எளிய மாணவர்களது கல்வி வாய்ப்பை  ஒட்டுமொத்தம் சிதைப்பது மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான முறையில் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட நாசகர அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கடிதம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களவை எழுப்பப்பட்ட கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்தார். அப்போது, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து ஜூலை 31-ம் தேதி வரை கருத்துகளை பதிவு செய்யலாம் என்று கூறினார்.