tamilnadu

img

புதிய மார்க்சிய ஏடுகள் உருவாகின்றன - என்.ராமகிருஷ்ணன்

மார்க்சும், ஏங்கெல்சும் மார்க்சியத்தை 1844ஆம் ஆண்டில் உருவாக்கியதிலிருந்து அவர்கள் தங்கள் கருத்துக்களை தொழிலாளி வர்க்கத்தினரிடமும், மக்களிடமும் கொண்டு செல்ல பெரும் கருவியாக பத்திரிகைகளை உருவாக்கினர். ஏராளமான சிறிய பிரசுரங்களை வெளியிட்டனர். பின்னர் பெரிய புத்தகங்களை எழுதி மார்க்சியக் கொள்கைகளைப் பரப்பினர். 1844ஆம் ஆண்டில் மார்க்ஸ் முதல் முறையாக பிரெஞ்ச் - ஜெர்மன் வருடாந்திர மலர் என்ற ஏட்டை வெளியிட்டார். பின்னர் 1848ஆம் ஆண்டில் நியூ ரைனிஷ் ஜைட்டூன் என்ற ஏட்டை வெளியிட்டார். பின் 1851ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து ‘ஆராய்ச்சி’ என்ற இதழை வெளியிட்டார். நியூயார்க் ஹெரால்டு டிரிப்யூன் என்ற நியூயார்க் நாளேட்டிற்கு ஏராளமான கட்டுரைகளை எழுதினார். ஏனென்றால் பத்திரிகைகள் மூலம்தான் கருத்துக்களை பரப்ப முடியும் என்று அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அதேபோல் ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் இஸ்க்ரா (தீப்பொறி) என்ற பத்திரிகையையும் பின்னர் பிராவ்தா என்ற பத்திரிகையையும் நடத்தினார். கட்சிப் பத்திரிகை என்பது கட்சி பிரச்சாரகன், கூட்டு அமைப்பாளன் என்று லெனின் உறுதியாகக் கூறினார். அதையேற்று சிங்காரவேலர் சென்னையில் தொழிலாளன் என்ற வார ஏட்டையும் தொழிலாளர் விவசாயிகள் கெஜட் என்ற ஆங்கில ஏட்டையும் துவக்கினார். அதேபோன்று எஸ்.ஏ.டாங்கே பம்பாயில் சோசலிஸ்ட் என்ற ஏட்டை துவக்கினார். பிற மாநிலங்களில் இன்குலாப், ஆத்ம சக்தி போன்ற ஏடுகளையும் கம்யூனிஸ்ட்டுகள் துவக்கினார்கள். இக்கட்டுரையானது இவையனைத்தையும் விளக்குகிறது.

                                                                                                                                                                         என்.ராமகிருஷ்ணன்

தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் போதனையூட்டுவதற்கும் அவர்களின் போராட்டச் செய்தியினை வெளியிடும் பொருட்டும் 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிங்காரவேலர் ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார ஏட்டினைத் துவக்கினார். தொழிலாளி வர்க்கம் அவசிய அரசியலில் பங்கேற்க வேண்டுமென்பதை அந்த ஏடு வலியுறுத்தியது.

புதிய தமிழ் வார ஏடாகிய தொழிலாளியின் முதல் இதழ் எங்களுக்குக் கிடைத்துள்ளது. தொழிலாளர் நலத்திலேயே முற்றிலும் ஈடுபாடு உடைய ஒரு செய்தித்தாளின் தேவை தமிழ்நாட்டில் கட்டாயமாகத் தேவைப்பட்டது. புதிய ஏடு இத்தேவையை இப்பொழுது நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். பிற நாடுகளில் தொழிலாளர் அடைந்துள்ள முன்னேற்றம், வளர்ச்சி, இந்தியத் தொழிலாளரின் இரங்கத்தக்க நிலை, தொழிலாளர் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவதற்கு உரிய வழிமுறைகள் ஆகியவை தொழிலாளனில் இடம்பெறும் இப்புனிதமான பணி குறித்து அவ்வேடு உண்மையிலேயே பெருமிதம் கொள்ளலாம். தொழிலாளர்கள் வாங்கக்கூடிய வகையில் அவ்வேட்டின் விலை அரை அணாவாக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வார ஏடு எம். சிங்காரவேலு செட்டியாரின் முன் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் வாழ்க்கை நிலைமைகளை உயர்வுறச் செய்ய அவரது தன்னலமற்ற முயற்சிகளை எல்லோரும் அறிவர். எம்.என்.ராய் பெர்லினிலிருந்து நடத்தி வந்த ‘இந்திய சுதந்திரத்தின் முன்னணிப் படை’ என்ற ஏடானது, இந்தப் புதிய பத்திரிகையை வாழ்த்தி வரவேற்றது. எம்.சிங்காரவேலுவை ஆசிரியாகக் கொண்ட இந்தியக் கம்யூனிசத்தின் மாதமிருமுறை இதழாகிய ‘தொழிலாளர் - விவசாயிகள் கெஜட்’டின் முதல் இதழின் பிரதிகளை நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றோம். இந்திய நாட்டின் தொழிலாளர் - விவசாயிகள் கட்சியின் கொள்கை பரப்பும் கருவியாகும் அது. தாய்மொழியில் அது தொழிலாளன் என்று வெளிவரும்.

அந்த ஏட்டின் கொள்கையாவது தொழிலாளர் - விவசாயத் தொழிலாளர் ஆகியோரது சுதந்திரத்திற்காகவும், உலகத் தொழிலாளரின் ஒருமைப்பாட்டுக்காகவும் பாடுபடுவதாகும். இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் உலகக் கம்யூனிசத்துக்காகவும் அது பாடுபடும். அது அனைத்து நாடுகளின் அனைத்துத் தொழிலாளரும் அனைத்துக் காலங்களிலும் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருப்பதற்கு என பாடுபடும். அது ஒரு மாபெரும் பணியாகும். புதிய போராட்டத் தோழனுக்கு எங்களது மனப்பூர்வமான வரவேற்பை அளிக்கிறோம். இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அது சிறப்பான பங்கினை ஆற்றுமென நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அந்த ஏடு புதிய பத்திரிகையை வரவேற்றது.

இவ்விரு புதிய பத்திரிகைகளும் சில மாதகாலத்திற்கு மட்டுமே வெளிவர முடிந்தன. 1924ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்ட் குழுக்கள் மீது தாக்குதல் தொடங்கிய நேரத்தில் அவை நிறுத்தப் பட்டன. ‘தொழிலாளர்- விவசாயிகள் கெஜட், ஏடுதான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஏடு என்று தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டு வந்த முதல் ஏடாகும். ஒரு சில இதழ்களே வெளிவர முடிந்த தென்றாலும் அந்த ஏடானது தொழிலாளர் -விவசாயிகள் இயக்கத்தின் ஆரம்ப காலச் சின்னமாக விளங்கியது.‘

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் நூலிலிருந்து...