தலித்துகள், பெண்கள் மற்றும் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் வரும் அக்டோபர் 13 அன்று எதிர்ப்பியக்கம் அனுசரிக்குமாறு சிஐடியு, விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசாங்கம் பின்பற்றிவரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளின் விளைவாக சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பிரிவினரைச் சேர்ந்த பெண்கள் பாலியல் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாவதும், குண்டர் கும்பல்களால் கொல்லப்படுவது போன்ற அட்டூழியங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நிலச் சீர்திருத்தங்களைக் கைவிட்டிருப்பதும், தனியார்மயத்தை அதிகரித்திருப்பதும் ஒட்டுமொத்த அளவில் வேலையிழப்புகளையும், வாழ்வாதார இழப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சமீப காலங்களில் இவை அதிகரித்திருக்கின்றன. இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாகிய ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது அதிகரித்திருக்கின்றன. இப்போராட்டங்களை இந்துத்துவா சக்திகள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சேவகம் செய்துவரும் கிராமப்புற பணக்கார விவசாயிகளுடன் கைகோர்த்து நின்று ஒடுக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
நவீன தாராளமய இந்துத்துவா ஆட்சியின்கீழ், உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவதும், கிராமப்புறங்களில் சாதிய/பாலின ஒடுக்குமுறை அதிகரித்துக் கொண்டுமிருக்கின்றன. இதுபோன்று சாதிய/பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்துப் பிரச்சனைகளையும் நாம் நம் கைகளில் எடுத்துக்கொண்டு போராட வேண்டியது மிகவும் முக்கியமாகும். இதுபோன்ற நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு எதிராகவும் கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியமாகும்.
ஆளும் கட்சியினரால் அரசமைப்புச்சட்டத்தில் தலித்துகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முன்பு இருந்த அரசாங்கங்களால் 1989ஆம் ஆண்டு தலித்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைச்)சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இப்போதுள்ள பாஜக அரசாங்கமோ அச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், தலித்துகள்/பழங்குடியினருக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிகிற கிரிமினல்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்து வருவதால், தலித்துகள்/பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.
உத்தரப்பிரதேசம், ஹத்ராசில், நிலப்பிரபு மற்றும் உயர்சாதி இந்துக்களால் 19 வயது இளம்பெண் கொடூரமான பாலியல் கூட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது, வன்முறையின் உச்சபட்ச வடிவமாகும். இது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கிறது. இக்குற்றத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர். உ.பி. பாஜக அரசாங்கம் மிகவும் நாணமற்றமுறையில் இக்கொடூரமான குற்றங்களைச் செய்த கயவர்களைக் காப்பாற்றுவதற்கான முறையில் இவ்வழக்கின் சாட்சியங்களை அழித்திட நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்தியத் தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் வீட்டிற்கு அக்டோபர் 4 அன்று சென்றனர். இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தங்கள் முழு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தனர்.
நாட்டில் தலித்துகளுக்கு எதிராகவும், இதர ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராகவும் கொடூரங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் பெண்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையில் உள்ள யோகி அரசாங்கத்தின்கீழ் ஒட்டுமொத்த கிரிமினல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இது உயர்சாதி நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின்கீழ் தலித்துகளையும், தங்கள் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் அச்சுறுத்தி அடக்கிவைத்திடும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு மிகச்சரியான எடுத்தக்காட்டு, உன்னாவோ வழக்காகும்.
நடைபெற்றுவரும் அட்டூழியங்களுக்கு எதிராக நாடு முழுதும் தன்னெழுச்சியாக எதிர்ப்பியக்கங்களை சமூகத்தின் அனைத்து ஜனநாயக சக்திகளும் மேற்கொண்டு வருகின்றனர். நம்முடைய கிளைகளும் ஹத்ராஸ் வன்புணர்வு மற்றும் கொலைக்கு எதிராக பல மாநிலங்களில் பல இடங்களில் எதிர்ப்பியக்கங்களை நடத்தி இருக்கின்றன.
இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடரும் போராட்டங்களின் ஓர் அங்கமாக சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவை வரும் அக்டோபர் 13 அன்று தலித்துகள், பெண்கள் மற்றும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு, எதிர்ப்பியக்கம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றன.
இக்கிளர்ச்சிப் போராட்டங்கள் உள்ளூர், பணியிடங்கள், கிராம அளவில் நடைபெற வேண்டும் என்றும் அவை அறைகூவல் விடுத்திருக்கின்றன.
போரட்டத்தின்போது நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள்:
1. ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் ஒரு காலக்கெடு நிர்ணயித்து வலுவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. தங்கள் கடமையைச் செய்யத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
3. கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
4. உன்னாவோ, பல்ராம்பூர் மற்றும் இதர இடங்களில் இதுபோன்ற வழக்குகளில் பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் நீதி வழங்கிட வேண்டும்.
5. நீதியரசர் வர்மா குழு பரிந்துரைகளை அமல்படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்திட வேண்டும்.
6. நிலமற்றவர்களுக்கு நிலம் மற்றும் வீடு வழங்கிட வேண்டும்.
7. அனைவருக்கும் வேலை, குறைந்தபட்ச ஊதியம் உத்தரவாதம் செய்திட வேண்டும்.
8. இட ஒதுக்கீடு, தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாகவுள்ள சட்டங்களைக் கறாராக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தங்கள் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.
(ந.நி.)