மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிகள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதிப்பட்டாததை கண்டித்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. மேலும் வேளாண் மசோதாக்களை மீண்டும் உரிய முறையில் வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று எதிரக்கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர்.
எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியதை துணை சபாநாயகர் பொருட்படுத்தாததால் எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிகள் 8 பேரை மாநிலங்களவை தலைவர் வெங்கயாநாயுடு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இடை நீக்கம் செய்யப்பட்ட 8 எம்பிகள் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் அவை நடவடிக்கையில் இடை நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களை அனுமதிக்கப்படாததை கண்டித்தும், மீண்டும் உரிய முறையில் வேளாண் மசோதாக்களை வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக இன்று எம்பிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் இளமாறம்கரீம் தனது டுவிட்டர் பதிவில் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாங்கள் பேசுவதையோ வாக்களிப்பதையோ அவர்கள் விரும்பவில்லை என்றால் நாங்கள் ஏன் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அரசு தற்போது வரை பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை. அவர்களின் நாடாளுமன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவோ சரி செய்யவோ அவர்கள் தயாராகவில்லை. விவசாயிகளுக்கான எங்கள் போராட்டத்தை தொடரும். நாடாளுமன்ற நடைமுறையை தகர்க்கும் நடவடிக்கையை எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.