தில்லியில் மோடி பேசிய பேச்சு, பொய்களின் மூட்டை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசியக் குடிமக்கள் பதிவேடு/தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுதும் மகத்தான அளவில் மக்களின் எதிர்ப்பலைகள் உக்கிரமாக வீசிக்கொண்டிருப்பதாலும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று குறைந்தபட்சம் பத்து மாநில முதல்வர்கள் பிரகடனம் செய்திருப்பதாலும் கலகலத்துப் போய், பிரதமர் மோடி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தில்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பொய் 1: அவர் கூறியது: “நான், 130 கோடி இந்தியக் குடிமக்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவெனில், எங்கள் அரசாங்கம் 2014இல் ஆட்சிக்கு வந்தபின்னர், எங்கேயுமே, தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து விவாதம் நடைபெறவில்லை. …”
உண்மை நிலை என்ன?: 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை, தேசியக் குடிமக்கள் பதிவேடு நாடு முழுதும் கொண்டுவரப்படும் என்று உறுதிமொழி அளிக்கிறது.
நவம்பர் 9 அன்று மக்களவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது:
“நாங்கள் நாடு முழுதும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவருவோம். ஊடுருவிவந்துள்ள ஒருவரையும் விட்டுவிட மாட்டோம்.”
தேசியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பான பணிகள் 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான தொகுப்புப் பணி தொடங்கும்போது அத்துடன் இணைத்து தொடங்கப்பட இருக்கிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் முதல் கட்டம். இதற்கான அரசிதழின் அறிவிக்கை 2019 ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
பொய் 2: மோடி கூறியது: “அடைப்பு மையங்கள் (detention centres) எங்கும் இல்லை.”
உண்மை நிலை என்ன?: மாநிலங்களவையில் டிசம்பர் 11 அன்று ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் உள்துறை இணை அமைச்சர், கூறியதாவது:
“சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள், அந்நியர்கள் தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் ஆகியவர்களை அடைத்து வைப்பதற்காக, அடைப்பு மையங்கள் அமைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. மத்திய அரசாங்கம், 9.1.2019 அன்று அடைப்புக் காவல் மையங்கள் கட்டவேண்டும் என்று கோரி ஒருங்குதிரட்டி (consolidated) அறிவுரைகள் அனைத்து மாநில/யூனியன் பிரதேச நிர்வாகத்தினருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.”
மத்திய அரசாங்கம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 28 அன்று கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிற அந்நிய நாடுகளைச் சேர்ந்தவர்களை அடைத்து வைப்பதற்காக அடைப்பு மையங்கள் அமைக்குமாறு 2014இலும் பின்னர் அதன் தொடர் கடிதம் 2018இலும் அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் எழுதி இருக்கிறோம்.”
2019 நவம்பரில், மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் உள்துறை இணை அமைச்சர் கூறியிருப்பதாவது:
“அஸ்ஸாமில் உள்ள அடைப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய புலம்பெயர்ந்தோரில் 28 பேர் இறந்திருக்கிறார்கள்.” மேலும் அவர் அஸ்ஸாமில் உள்ள ஆறு அடைப்புக் காவல் மையங்களில் 988 “அந்நியர்கள்” அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சகம் 2014 ஏப்ரல் 24/29 தேதிகளிலும், பின்னர் மீண்டும் 2014 செப்டம்பர் 9-10 தேதிகளிலும் இது தொடர்பாக அறிவுறுத்தல்கள் அனுப்பியிருக்கிறது. அவற்றின் அடிப்படையில், ஒரு மாதிரி அடைப்பு மையம்/இருத்தி வைத்திருப்பதற்கான மையம்/முகாம் கையேடு (a model detention centre/holding centre/camp manual) 2018இல் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
கர்நாடகா போன்ற பல பாஜக மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே அடைப்பு மையங்களைக் கட்டுவதற்குக் கட்டளை பிறப்பித்திருக்கின்றன.
பொய் 3: மோடி கூறியது: “நான் எந்தவொருவரின் மதம் குறித்தும் எப்போதும் கேட்டது கிடையாது.”
உண்மை நிலை என்ன?: சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் தும்கா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மோடி, “வன்முறையில் ஈடுபடுவோரை அவர்கள் அணிந்திருக்கும் உடைகளிலிருந்து அடையாளம் காண முடியும்,” என்று பேசியிருக்கிறார்.
2019 பொதுத் தேர்தலின்போது, மோடி, “ராகுல் காந்தி, கேரளாவில் உள்ள வயநாட்டிலிருந்து, அதாவது, சிறுபான்மையினர் பெரும்பான்மையாகவுள்ள ஓர் இடத்திலிருந்து போட்டி போடத் தெரிவு செய்திருக்கிறார்,” என்று பேசினார்.
இவ்வாறாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதன் மூலமாக, மக்களை,
தாங்கள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற-ஜனநாயக சாராம்சத்தின்மீது ஏவியுள்ள தாக்குதல்களிலிருந்து திசை திருப்ப விரும்புகிறார்.
90 நிமிடங்கள் ஆற்றிய அவருடைய உரையில், தங்களுடைய அரசாங்கத்தின் கொள்கைகளின் விளைவாக, நாட்டில் அதிகரித்து வரும் மக்களின் வறிய நிலை குறித்தோ, மக்களின் வாழ்வாதார நிலை நாளுக்கு நாள் சீரழிந்துகொண்டிருப்பது குறித்தோ ஒரு வார்த்தைகூட பேசிடவில்லை. பொருளாதாரம் முற்றிலுமாக மந்த நிலைக்குச் சென்றுள்ளது. வேலையின்மை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உச்சத்தை எட்டியுள்ளது. விவசாய நெருக்கடியின் விளைவாக விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பணவீக்கம் மக்களின் வாழ்க்கையைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள், அதீதமான விலையின் காரணமாக வெங்காயம் சாப்பிடுவதையே விட்டுவிட்டார்கள். மோடி அரசாங்கத்தின் ஒரேயொரு நிகழ்ச்சிநிரல், மதவெறித் தீயை விசிறிவிட்டு, அதன் மூலமாக மக்கள் மத்தியில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்பி, அவர்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்பதேயாகும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசியக் குடிமக்கள் பதிவேடு/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றின் பணிகள் குறித்து, அரசாங்கம் அதிகாரபூர்வமாக அனுப்பியுள்ள அறிவிக்கைகளை நிறுத்தும் வரையிலும், இவற்றிற்கு எதிரான எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தொடர வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)