tamilnadu

img

மோடியின் பேச்சு பொய்களால் நிரம்பியவை - சீத்தாராம் யெச்சூரி

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் துவக்கி வைத்து ஞாயிறு அன்று தில்லியில் உரையாற்றிய பிரதமர் அவிழ்த்துவிட்ட அத்தனையும் உண்மையல்லாதவைகள், அரை உண்மைகள், செய்திகளைத் திரித்துக் கூறுபவைகளாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மேலும் அவர், அரசாங்கம் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை ரத்து செய்திட வேண்டும் என்றும், குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய திருத்தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியது தொடர்பாக செய்தியாளர்களிடம் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:
“மோடி, தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து முஸ்லீம் மக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை எனக் கூறி அவர்களிடமிருக்கும் அச்ச உணர்வைப் போக்க முயற்சித்த அதே சமயத்தில் இதற்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்புக் கிளர்ச்சி போராட்டம் நாடு தழுவிய அளவில் இருபது உயிரைக் குடித்திருக்கிறது.  மோடி பேச்சு பொய்களால் நிரம்பியவை, அரை உண்மைகள் மற்றும் அறிக்கைகளைத் திரித்துக்கூறியவைகளாகும். தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்ததாகட்டும், குடியுரிமைத் திருத்தச் சட்டமாகட்டும் அல்லது தடுப்புக்காவல் முகாம்கள் (Detention camps) ஆகட்டும், உண்மைகள் அவர் கூறிவற்றிற்கு முற்றிலும் மாறானவைகளாகும்.
மக்களின் வறுமையைப் போக்கிட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் கிரிமினல்தனமான புறக்கணிப்பை மேற்கொண்டு வருகிறார். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு வெங்காயத்தின் விலைகள் உயர்ந்திருக்கிறது. விவசாய நெருக்கடி தொடர்வதன் காரணமாக விவசாயிகள் தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கிறது. இவை எதைப்பற்றியும் பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அகில இந்திய தேசியக் குடிமக்கள் பதிவேடு பதிவு செய்யப்படுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ரத்து செய்துவிட்டதாக தெளிவான வார்த்தைகளில் பிரதமர் கூறிட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட வேண்டும்.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ந.நி.)