மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுமக்களின் கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரத்தை பறிப்பதில் குறியாக உள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கருத்துகளை விமர்சித்தவர்களையும், பத்திரிகையாளர்களையும் மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்துத்துவா கருத்துகளை விமர்சிக்கும் திரைப்படங்களையும் பாஜக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏற்கனவே சமூக ஊடகங்களைக் கண்காணிக்கும் வகையில் ஒரு கொடிய திட்டத்தை கொண்டுவர (Social Media Communication Hub) மோடி அரசு முயற்சித்தது. அதற்கென சோசியல் மீடியா அனாலெட்டிக் டூல் நடைமுறை முன்வைக்கப்பட்டது. இதன்மூலம் பொதுமக்களின் மின்னஞ்சல்களை 'கவனிப்பது' உட்பட மக்களின் சமூக ஊடகச் செயல்பாடுகளைக் கண்காணிக்க முயற்சித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தையடுத்து வேறு வழியின்றி அந்த முயற்சியை கைவிட்டது.
இந்நிலையில் மோடி அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ்ன் செயல்திட்டத்தை மூர்க்க மான முறையில் நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவசர அவசரமாக செய்தி இணையதளங்கள் நெட்பிளிக்ஸ் அமேசான் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், ஒலிக்காட்சிகள் போன்றவற்றை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்திற்கு செவ்வாயன்று இரவு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்ட ஆணையை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த ஆணையில் அரசியலமைப்பு சட்டம் 77 ல் உள்ள 3ஆவது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்திய அரசின் வணிக ஒதுக்கீடு விதிகள் 1961ஐ திருத்துவதன் மூலம் இச்சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) 357 வது திருத்த விதிகள் 2020 என அழைக்கப்படும். இந்த சட்டத்தின் அடிப்படையில் ஆன்லைன் தளங்களில் வெளியாகும் செய்தி ஆடியோ, வீடியோ, திரைப்படங்கள் தொடர்பான கொள்கைகளை தங்கள் வசதிக்கேற்ப மாற்றும் அதிகாரம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் அரசுக்கு எதிரான கருத்துகள் என்ற பெயரில் அரசை விமர்சிக்கும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் செய்திகளை பகிர்வதை கட்டுப்படுத்தும். குறிப்பாக மத்திய அரசு விரும்பும் செய்திகளை மட்டுமே இணையதளங்கள் வெளியிடக்கூடிய சூழல் உருவாகும். ஏற்கனவே அரசை விமர்சித்த தி வயர் இணை இதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜ், ஸ்க்ரால் இணைய செய்தியாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மோடி அரசை விமர்சிக்கும் நடிகர் நடிகைகளின் திரைப்படங்களை முடக்கும் ஆபத்தான சூழலும் உள்ளது.
இதனால் இந்த சட்டத்தை மோடி அரசு திரும்ப பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.